மத்திய அமைச்சர் அனந்த குமார் இன்று அதிகாலை காலமானார். புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அனந்தகுமார், சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவரது மறைவு பாஜக., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.
சங்பரிவார் எனப்படும் சங்க குடும்ப அமைப்பின் மாணவர் பிரிவான #ABVP எனப்படும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் தன்னுடைய பொது வாழ்வை மாணவப் பருவத்திலேயே தொடங்கியவர். இளம் வயதிலேயே அரசியல் ஈடுபாட்டால் பொது வாழ்வில் இறங்கியவர். நெருக்கடி நிலைக் காலத்தில், சிறை சென்றவர். பின்னாளில் ABVP கர்நாடக மாநில செயலாளர் மற்றும் தேசிய செயலாளராக உயர்ந்தவர்!
பின்னர் மாணவர் அமைப்பின் பொறுப்பில் இருந்து தீவிர அரசியலில் இறங்க, பாஜக.,வில் தன்னை இணைந்துக்கொண்டார். தொடர்ந்து கர்நாடக மாநில இளைஞர் அணி தலைவர், மாநில தலைவர், தேசிய செயலாளர் மற்றும் தேசிய பொது செயலாளர் என்று பணியாற்றினார்.
1996 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி, தொடர்ந்து ஆறு முறை, பெங்களூரு தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து வந்திருக்கிறார். பெங்களூர் வளர்ச்சிக்கு தனது பெரும்பகுதி காலத்தை செலவிட்டவர்.
முந்தைய வாஜ்பாய் ஆட்சியிலும் தற்போதைய மோடி ஆட்சியிலும் அமைச்சாராக இருந்தவர் அனந்தகுமார்.