பெங்களுரூ: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த அனந்த குமார் இன்று அதிகாலை காலமானார். புற்று நோய்க்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அனந்தகுமார் காலமானதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.
பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996, 1998, 1999, 2004, 2009, 2014 என 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெறற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அனந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மோடி தனது டிவிட்டர் பதிவுகளில், அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளதாகவும், தனது மதிப்பு மிக்க ஒரு சகாவை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறு வயதிலேயே அரசியலுக்கு வந்த அனந்தகுமார், குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தலைவராக உயர்ந்தார். பாஜக.,வுக்கு மதிப்புள்ள ஒரு சொத்தாகத் திகழ்ந்த அனந்தகுமார், சிறந்த நிர்வாகி, தனது துறையை திறம்பட கையாண்டவர், கர்நாடகத்தில் கட்சியை வலுப்படுத்தியவர், குறிப்பாக பெங்களூர் மற்றும் சுற்றுப் பகுதியில் கட்சியை வலுப்படுத்தி எப்போதும் தனது தொகுதிகளில் வலம் வந்தவர் என்று கூறியுள்ளார்.
மேலும், அனந்தகுமாரின் மனைவி டாக்டர் தேஜஸ்வினியிடம் தாம் பேசியதாகவும், அவரிடம் தமது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.
Ananth Kumar Ji was an able administrator, who handled many ministerial portfolios and was a great asset to the BJP organisation. He worked hard to strengthen the Party in Karnataka, particularly in Bengaluru and surrounding areas. He was always accessible to his constituents.
— Narendra Modi (@narendramodi) November 12, 2018
அனந்தகுமார் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த இரங்கலில், பெங்களூரு வளர்ச்சியை தனது உயிர் மூச்சாக கருதி பணியாற்றியவர் அனந்த குமார் என தெரிவித்துள்ளார்
கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கௌட தனது இரங்கல் செய்தியில், நண்பர் அனந்தகுமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள், பாஜக., தலைவர்கள் என பலரும் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, மத்திய அமைச்சர் அனந்த்குமார் மறைவை தொடர்ந்து கர்நாடகாவில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.