பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன்(வயது 50) காலமானார், சென்னையில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 5:10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது!
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வந்தார் நெல் ஜெயராமன். இந்தக் காரணத்தால், 160க்கும் மேற்பட்ட அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வந்தார்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை விவசாயம் குறித்து தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தவர். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடினார். பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றியதற்காக மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றார்.
கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்த நெல் ஜெயராமன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் சிகிச்சைக்காக நிதி உதவி செய்து வந்தார்கள்.
இந்நிலையில் டிச.6 இன்று அதிகாலை 5 மணி அளவில் அவர் காலமானார். இதனை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.