திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனத்தையொட்டி இன்று முதல் 19ம் தேதி வரை கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு, முதலில் குறைந்த எண்ணிக்கையில் வி.வி.ஐ.பி.க்கள் புரோட்டோகால் தரிசனத்தில் அதிகாலை 3 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவர். பின்னர் அதிகாலை 5 மணி அளவில் மற்ற பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர்.
திருப்பதி ஏழுமையான் கோவிலில் தினமும் அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை சுப்ரபாத சேவை நடைபெறும். மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் சொல்லப்படுகிறது!
திருமலை திருப்பதி மலை மீது இருசக்கர வாகனத்தில் வர இயலாது. பைக்கில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். இவை இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்களும்கூட அலிபிரியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மலை மீது பஸ்சில்தான் செல்ல வேண்டும் என்று தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
18ம் தேதி நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வைகுண்ட ஏகாதசியையொட்டி தங்க ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 19ம் தேதி துவாதசியையொட்டி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணிநேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனத்தையொட்டி இன்று முதல் 19ம் தேதி வரை கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கோயில் அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.