சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை எதிர்த்து கேரளாவில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
இதை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன. பந்த் காரணமாக கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்கள் வலுக்கட்டாயமாக மாநில அரசால் தந்திரமான முறையில் அழைத்துச் செல்லப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ஒரு நாள் முழு அடைப்புக்கு சபரிமலை கர்ம சமிதி அழைப்பு விடுத்தது. இதை அடுத்து இன்று, கடைகள் திறக்கப்படாது என்றும், வாகனங்கள் இயங்காது என்றும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பந்த் காரணமாக கேரளாவில் நடக்க உள்ள பள்ளி அரையாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக்கப் பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் உடைக்கப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில் நேற்று அதிகாலை கனகதுர்கா, பிந்து என்று இரு பெண்கள் சன்னதி முன்னர் நிறுத்தப் பட்டதைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தில் நேற்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனைச்சாவடி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் இன்று கேரள மாநிலத்தில் பந்த் அறிவிப்பைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை சோதனைச்சாவடியில் டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.