சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நீங்கள் பணிக்குத் திரும்புங்கள் என்றுதான் உத்தரவிட்டோம், வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகத்தில் பரவலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜன.22 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு அரசு கேட்டுக் கொண்டும் வலியுறுத்தியும் வந்தது. ஆனால், அரசு ஊழியர் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு அதனை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்கும்படி தமிழக அரசு சார்பில் ஒரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.
ஆனால், தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. பணிக்கு வராத ஆசிரியர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தான் உத்தரவிட்டோம். போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை. ஆசிரியர்களின் வேலைநிறுத்த நோட்டீஸுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளது.