காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு உயரிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்துள்ளார்.
பலருக்கு குடும்பமே கட்சியாக இருப்பதாகவும், பாஜகவுக்கோ கட்சிதான் குடும்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.
தற்போது பிரியங்கா உத்தரப் பிரதேச கிழக்கு மண்டல பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். இது, பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் போட்டியிட்டு வெற்றிபெற்ற மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தை சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் காணொளி மூலம் உரையாடிய மோடி, பல கட்சிகளுக்கு குடும்பமே முக்கியமாக இருக்கிறது. ஆனால் பாஜகவின் ரத்த நாளங்களில் ஜனநாயகம் ஓடுகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் கட்சிதான் குடும்பம் என்றார் அவர்.