பெங்களூர் :சூரத்தை அடுத்து கர்நாடகாவிலும் ஒரு தம்பதி, தங்களது திருமணப் பரிசாக, மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அழைப்பிதழில் அச்சடித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே எங்களது திருமணத்திற்கு நீங்கள் அளிக்கும் பரிசு என்று கர்நாடக கல்யாண தம்பதி திருமண அழைப்பிதழில் அச்சடித்துள்ளதை வரவேற்றுள்ள சமூக வலைத்தள வாசிகள், அந்த அழைப்பிதழையும் வைரலாக்கி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திலுள்ள தேவாங்கரே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், ரேகா இருவருக்கும் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, உறவினர்கள், நண்பர்களுக்கு அவர்கள் அளித்து வருகின்றனர். ஆனால் இந்தத் திருமண அழைப்பிதழ் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி, மிகப் பிரபலம் அடைந்திருக்கிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக்களிப்போம் என்ற வாக்குறுதியை அளிப்பதுதான் எங்கள் திருமணத்துக்கு வந்து எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதாகவும் பரிசுப் பொருள் கொடுப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று , மணமக்கள் இருவரும் அந்தத் திருமண அழைப்பிதழிலும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சுவச்ச பாரத் திட்டத்தின் வாசகங்களும் விழிப்பு உணர்வூட்டும் கருத்துகளும் அதில் உள்ளன.
முன்னதாக, குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த யுவராஜ் – சாக்சி தம்பதி, ரபேல் போர்விமானங்கள் விவகாரத்தில் மோடி அரசின் சரியான செயல்பாடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை, தங்களது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டு விளம்பரப் படுத்தியிருந்தனர். இந்த அழைப்பிதழைக் கண்ட பிரதமர் மோடி, அந்த தம்பதியினரை பாராட்டும் வகையில் பாராட்டு கடிதம் அனுப்பிவைத்திருந்தார்.