மோடியின் தேதி காலாவதி ஆகிவிட்டது, இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்று, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தகவல் வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள தில்லி புறப்படும் முன் கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார் மம்தா பானர்ஜி!
அப்போது அவர், மீண்டும் ஆட்சிக்கு வரபோவதில்லை என மோடிக்கு தெரியும். அவரது காலாவதி தேதி முடிந்து விட்டது. இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். புதிய அரசை காண விரும்புகிறோம். நாடு மாற்றத்தை விரும்புகிறது. ஒன்றுபட்ட இந்தியாவையே நாடு விரும்புகிறது. அதுவே ஜனநாயகத்தை தொடர செய்யும் என்று கூறினார்.
அண்மையில், கோல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தின் விளைவால் அடிக்கடி எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. அதன் படி, இன்று தில்லியில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி தர்ணா போராட்டம் நடத்துகின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் இல்லாமல் கோல்கத்தா போராட்டத்தை நடத்தி முடித்தார் மம்தா பானர்ஜி. காங்கிரஸை ஓரம் கட்டி, ராகுலை ஓரம் கட்டி, பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதுடன், மோடிக்கு சிறந்த எதிரியாக தானே இருப்பதாக காட்டிக் கொண்டு வருகிறார்.
அண்மையில் கோல்கத்தாவில் மம்தா நடத்திய பொதுக்கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதுபோல் இந்த தர்ணா போராட்டத்திலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப் படுகிறது.