தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
பாம்பனைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைதாகியுள்ளனர். ஒரு விசைபடகு பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு நாட்களில் மட்டும் 18 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் கொலம்பஸ் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் 5 மீனவர்களை தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி 5 மீனவர்களைக் கைது செய்ததுடன், ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
மன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மண்டபம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 13மீனவர்கள் கைது செய்துள்ள நிலையில், தற்போது 5 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை என்பது குறிப்பிடத் தக்கது.