இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத் துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி இது குறித்துக் கூறிய போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வர இயலாத அளவுக்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
புல்வாமா தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதற்கு உண்டான ஆதாரங்களை இந்தியா எங்களிடம் வழங்கினால், நாங்கள் எங்கள் நாட்டு நீதித்துறையிடம் இதனை ஒப்படைப்போம் என்று கூறினார்.
முன்னதாக புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர், ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார், பின்னர் உளவுத் துறை ஐஎஸ்ஐ.,யின் வழிகாட்டுதல் படி அங்கிருந்து வேகவேகமாக தெற்கு பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூருக்கு மாற்றப்பட்டார்.
முன்னதாக, காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த மனித தற்கொலைப் படை தாக்குதலில் பிப்.,14ம் தேதி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனை அடுத்து இந்தியா இது குறித்து குற்றம்சாட்டியது. ஆனால், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தலைவர் மசூத் அசார் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து
வந்த பாகிஸ்தான், தற்போது தங்கள் நாட்டில் அவர் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது!