நெல்லை மாவட்டம் புளியரையில் உள்ள செண்பகவல்லி அம்மன் ஆலயத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு பூஜை நடத்தப் பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் தென்காசி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் கலந்து கொண்டு புளியரை காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சமுதாயத் தலைவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். இந்தக் கோயிலில் வருடம் தோறும் இந்த சிறப்பு பூஜைகளை போலீஸார் செய்வது வழக்கம்.
காவல்துறையினரின் இந்தப் புதிய அணுகுமுறை மக்களை கவர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இந்த முறை போலீஸாரின் இந்த சிறப்பு பூஜையும், சமுதாயப் பெரியவர்களை அழைத்து பொன்னாடை அணிவித்தலும் கூடுதல் கவனம் பெற்றது.
முன்னதாக, கடந்த பிப்.25ஆம் தேதி, புளியரை அருகே பகவதியாபுரம் கிராமத்தில், இரு தரப்பு பிரச்னையில் ஒரு விநாயகர் கோயிலை அகற்றினர் புளியரை போலீஸார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகம் வாழும் தெருவின் முனையில் கிடந்த காலி இடத்தில், அரசின் புறம்போக்கு நிலத்தில், கிறிஸ்துவ அமைப்பு ஒன்று குருசடி எனப்படும் சிறிய அளவிலான சர்ச் ஒன்றைக் கட்ட முயன்றுள்ளது. அதனை அந்தப் பகுதியினர் தட்டிக் கேட்டதுடன் அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் மீண்டும் வேற்று மதத்தினர் ஆக்கிரமிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில், அந்தத் தெருவில் இருந்த சிலர், அங்கே சிறிய விநாயகர் கோயில் கட்டி வந்தனர்! ஆனால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த இன்னொரு தரப்பினர் இதுகுறித்து புகார் அளிக்க, முறையான அனுமதி இன்றி புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட அந்தக் கோயிலை அகற்ற போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன.
இந்நிலையில், இதை அறிந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கிராம மக்களுக்கு ஆதரவாக களம் இறங்கினர். தொடர்ந்து, செங்கோட்டை ஒன்றியம் புளியரை பஞ்சாயத்து பகவதிபுரம் கிராமத்தில், கிராம மக்கள் புதிதாக விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். அதற்காக, ஹிந்து முன்னணி சார்பில் கொடியேற்றப் பட்டு, சமர்ப்பணம் செய்யப் பட்டது.
இந்த விழாவில், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த, ஆறுமுகம், மாசாணம், திருமலை, அருணாசலம், எஸ்.முருகன், சுரேஷ், பிஜேபி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்ராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலை திடீரென்று எந்த அறிவிப்பும் இன்றி வைக்கப்பட்டதால், போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து, அதே நாளில் அந்தக் கட்டடத்தில் திடீரென்று வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீஸார் அகற்றி, செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வைத்துள்ளனர். அப்போது, அந்தக் கோயில் பகுதியைச் சார்ந்த பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினர்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் மேலும் பதற்றம் ஏற்படாமலும், அனைத்து சமுதாயங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக புளியரை செண்பகவல்லி அம்மன் கோயிலில் போலீஸார் ஏற்பாடு செய்த இந்த சிறப்பு பூஜை கூடுதல் கவனம் பெற்றது.