எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக.,வும், அமமுக.,வும் இந்த விவகாரத்தில் கொந்தளிப்பதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையேயான நெருக்கம் இதன் மூலம் தெரிய வருவதாகவும் கூறினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக அதிமுக கொறடா, சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதில் திமுக., ஏன் தலையிடுகிறது? எந்த அடிப்படையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளனர் என்பது தெரியவில்லை.
4 தொகுதி இடைத்தேர்தல் உட்பட 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். திமுக.,வுக்கும் தினகரனுக்கும் உள்ள நெருக்கம் ஸ்டாலினின் கொந்தளிப்பால் வெளிப்பட்டு விட்டது.
அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் மீது தான் கொறடா புகார் அளித்தார். எங்கள் கட்சியை சேர்ந்தவர் கட்சிக்கு விரோதமாக நடந்ததால் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. இதற்கு ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார்? அவரது கோபமும், கொந்தளிப்பும் திமுகவுக்கும், தினகரன் கட்சிக்கும் எவ்வளவு நெருக்கம் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.