புராணங்களும் ராஜநீதி சாஸ்திரங்களும் நம் வாழ்க்கையை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காக ஏற்பட்டவையே!
அரசாட்சி அமைப்பு குறித்தும் செல்வம் சேர்ப்பது குறித்தும் அந்நாட்களில் கூறியுள்ள அம்சங்களை நாம் பரிசீலனை செய்தால் இன்றைக்கும் அவற்றை பின்பற்றினால் போதும் நம் நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளும் செழிப்பாக திகழும் என்பது தெளிவாக புரியும்.
முக்கியமாக ஊழல் மூலமோ அநீதி மூலமோ சேர்த்த அக்கிரம வருமானம் பற்றி நம் நாட்டின் ராஜ நீதி சாஸ்திரங்கள் வியப்பான தகவல்களை தருகின்றன. சுக்கிர நீதி சாரம் என்ற நூலில் ஒரு விஷயம் உள்ளது. யாராவது கபடமாக தனம் சம்பாதித்தால் அந்த செல்வத்தை முழுமையாக அரசாங்கம் உடைமை படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சுக்கிராச்சாரியார்.
இங்கு கபடமாக என்ற சொல்லுக்கு அக்கிரம வழியில் என்று பொருள் கொள்ளவேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக அதர்ம வழியில் ஈட்டிய பொருள், சரியாக கணக்கு காட்டாத செல்வம் போன்றவை அரசாங்கத்திற்கு சொந்தமாகும். இதன் மூலம் சமுதாயத்தில் ஊழல் பண வரவை எவ்விதமாக தடுத்து நிறுத்துவது என்ற வழியை சுக்கிராச்சாரியார் நமக்கு எடுத்துக் கூறுகிறார்.
இன்னும் சற்று விரிவாகப் பார்க்கையில் ஒருவன் தன் வருமானத்தை வேறு ஒரு தேசத்திற்கு அனுப்பி அங்கு பத்திரப்படுத்தினால் அவனை கடுமையாக தண்டிக்க வேண்டும். தேவையானால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதி சாஸ்திரத்தில் காணப்படுகிறது.
இது மிகவும் ஆச்சரியமான அம்சம். ஒரு அதிகாரியோ, அரசாளும் தலைவரோ, வியாபாரியோ தன் நாட்டில் சம்பாதிக்கும் தனத்தை வெளிநாட்டில் மறைத்து வைத்தால் அப்படிப்பட்டவரை உடனடியாக கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நீதி சாஸ்திரம் போதிக்கிறது.
இந்தக் கருத்தை தற்கால சமுதாயத்தில் அதுபோல் செய்பவர்களிடம் எடுத்துக் கூறினால் அவர்களுக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருக்கும். நம் நாட்டில் சேமித்தது போக இன்னும் அதிக அளவு சட்டத்திற்குப் புறம்பாக வரும் வருமானத்தை வெளிநாடுகளில் சேமித்து வைப்பவர்கள் நிறைய பேர் இன்றைக்கும் உள்ளார்கள். மிகச் சாமானியன் கூட அந்த அக்கவுண்டின் பெயரை கேள்விப்பட்டிருப்பான். அந்த வங்கியின் பெயர் கூட அனைவரும் அறிந்ததே!
அந்த மாதிரி வெளிநாடுகளில் மறைத்து வைக்கும் போது, மறைத்து வைத்தவர்களின் விவரங்களை யாருக்கும் தெரிவிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தின் பேரில் மிக ரகசியமாக ஒளித்து வைப்பார்கள். அதுபோன்ற வேற்று நாடுகளில் படு ரகசியமாக பணத்தை ஒளித்து வைத்துள்ளவர்களுக்கு மிகக் கடின தண்டனை அளிக்கும்படி அன்றே விதித்துள்ளார்கள் நம் சாஸ்திரங்களில். அது போன்ற தண்டனைகளை நம் அரசாட்சி அமைப்பில் நடைமுறைப்படுத்தினால் நம் பாரத தேசம் அநீதியோ ஊழலோ அற்ற சமுதாயமாக மாற முடியும்.
ஏனென்றால் பரிசுத்தம் என்பது வெறும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது மாத்திரமே அல்ல! அரசாளுபவர்களிடமும் தலைவர்களிடமும் சுத்தம் இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையிலும் வருமானத்திலும் அரசாளும் வழிமுறையிலும் பரிசுத்தம் விளங்க வேண்டும். அப்போதுதான் ஸ்வச்ச பாரதத்தை சாதிக்க இயலும். ஊழலற்ற சமுதாயம் பற்றி நம் புராணங்கள், இதிகாசங்கள், நீதி சாஸ்திரங்கள் போன்றவை அற்புதமான கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றன. அவற்றை நாம் வகுப்பு பாடங்களாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
சனாதன தர்மம் என்றால் கோயில் குளங்கள், பூஜை புனஸ்காரங்கள் மாத்திரமே என்று உதாசீனப்படுத்த தேவையில்லை. அவற்றை நாம் கௌரவிக்க வேண்டும். அதோடு கூட நாம் நீதியோடும் தர்மத்தோடு நடந்து கொண்டால்தான் கோவிலில் விளங்கும் தெய்வமும் அருள்புரியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதுபோலின்றி அநீதி வழியில் வாழ்க்கை நடத்திக்கொண்டு இறைவனின் கண்ணை மறைக்கலாம் என்று நினைப்பது மற்றுமொரு பாவச்செயலாகவே மாறும் என்பதை உணரவேண்டும். அநீதியாளர்களுக்கு இறைவனின் அருகாமையில் பிரவேசம் கூட இல்லை என்பதை அறிய வேண்டும்.
இது போன்ற கடினமான நியமங்களை நாம் எடுத்துக் கூறுகையில் இதனை தார்மீக ரீதியாகவும் அறியவேண்டும். அரசாட்சி நீதியாகவும் அறியவேண்டும். மக்களை அரசாளும் தலைவனுக்கு இருக்க வேண்டிய நீதியும் தனி மனிதன் கடவுள் அருளைப் பெற வேண்டிய தார்மீக நீதியும் வேறுவேறல்ல. இரண்டும் ஒன்றேதான். தார்மீக நீதி, உலக நலனுக்கு உபயோகப்படும் சமுதாய விதானம் இரண்டும் ஒன்றே!
மக்கள் நலனுக்காக நீதி சாஸ்திரம் எத்தனை உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது என்று பார்க்கையில் வியப்பாக உள்ளது. ஒருவருக்கு கடன் கொடுக்கும்போது வட்டி வாங்குவது தவறு. ஒருவேளை வட்டி வாங்கிக் கொண்டு கடன் கொடுப்பவர், கடன் பெறுபவரிடமிருந்து நான்கு பங்கு வட்டி பெற்று கொண்டு விட்டால் இனி கடனை அடைக்க தேவையில்லை என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது.
எத்தனை சிறப்பு பாருங்கள்! அதாவது அதிக வட்டி பெறுகையில் நான்கு தவணை செலுத்தி விட்டால் போதும், கடன் தீர்ந்து விட்டதாக பொருள் என்கிறது நீதி சாஸ்திரம். எத்தனை விரிவாக பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாஸ்திரம் பேசுகிறதோ கவனியுங்கள்!
அதுமட்டுமல்ல. அரசு கருவூலத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக விவசாயிகள், தொழிலாளிகள் இவர்களிடம் பாரம் சுமத்தக்கூடாது. அவர்களுக்கு அரசு பயிர்க் கடன் அளித்திருந்தால் கருவூலத்தை நிரப்பும் உத்தேசத்தோடு அவர்களிடமிருந்து கடனை வசூல் செய்ய முயற்சிக்கக் கூடாது என்று தெரிவிக்கிறது ராஜ நீதி சாஸ்திரம்.
விவசாயக் கடன் தள்ளுபடி என்ற சொல்லை தற்கால அரசியல் தலைவர்கள் அதிகம் உபயோகித்து வருகிறார்கள். அது தொடர்பான சிறந்த வடிவத்தை நம் புராதன ராஜ நீதி சாஸ்திரத்தில் நம்மால் காணமுடிகிறது.
அந்நாட்களில் பொதுமக்கள் நலனில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து அரசாட்சி நடந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். பொருளாதார நியமங்களை ராஜ நீதி சாஸ்திரம் அத்தனை சிறப்பாக போதித்துள்ளது.
அவற்றை நமக்களித்த ரிஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்