
- பி.ஆர்.மகாதேவன்
பிரச்னை, விருதைக் கேட்டு வாங்கிக்கொண்ட வயிரவ முத்து(ராமலிங்கம்) மீது அல்ல; கேட்டவருக்குக் கொடுத்த ஞானபீடம் மீதும் அல்ல. அது சமூகத்தில் இருக்கிறது.
‘ஞான பீட விருது’ தகுதிக்கு மீறிய அல்லது தவறான பெருமையைக் கொண்ட ஒரு விருது. தேசத்தின் விருதுபோல் தோற்றம் காட்டும் தனியார் விருது.
ஒருவகையில் தனக்கான பெருமையை பெருமளவுக்கு நிலைநிறுத்திக்கொண்ட விருதும்கூட. என்றாலும் தேசத்தின் விருதாக ஒரு தனியார் விருதைக் கருதுவது தேசத்துக்கும் நல்லதல்ல; தனியாருக்கும் சரியல்ல.
அரசு தரும் விருதுகளான சாஹித்ய அகாதமி விருது, கலை மாமணி போன்ற விருதுகள்தான் உண்மையில் தேச – பிராந்திய விருதாக, மக்கள் விருதாக மதிக்கப்படவேண்டியது. மக்கள் விருது என்று சொன்னால் எளிய மக்கள் திரள் என்ற அர்த்தத்தில் அல்ல. அந்த மக்களுடைய விருதும்கூட. என்றாலும் இலக்கிய நயத்துக்காகத் தரப்படக்கூடிய விருதுகளே அவை.
உன்னத இலக்கியங்கள் மக்கள் கலையாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். லெளகிக, யதார்த்த விஷயங்கள் சார்ந்தும் அது இருக்கலாம். ஒட்டு மொத்த மானுட குலம் சார்ந்ததாக, கால, வெளிகளைக் கடந்த அறமும் ஆன்மிகமும் கொண்டதாகவும் அது இருக்கலாம்.
பொதுவாக, ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாக, ஒரு மக்கள் திரளின் ஆன்மாவாக அது திகழும். திகழவேண்டும்.
அந்த அளவுகோலின்படிப் பார்த்தால் இந்த ஞானபீடவிருது தகுதியானவருக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. விருதுக் குழு சரியான செயலைத்தான் செய்திருக்கிறது.
கண்ணாடியில் தெரியும் முகம் அசிங்கமாகத் தெரிகிறதென்றால் கண்ணாடியின் குறையில்லை. சமூகம் மலினப்பட்டுக் கிடக்கிறது. எனவே அதைப் பிரதிபலிக்கும் இந்த விருதும் மலினப்பட்டுவிட்டிருக்கிறது.
ஒருவேளை மிகவும் சிறப்பான வேறொரு படைப்பாளிக்கு இந்த விருது தரப்பட்டிருந்தால் கண்ணாடி, மாய பிம்பத்தைக் காட்டுகிறது என்று அர்த்தம். சிதிலமடைந்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு கொண்டு துலக்கிக் காட்டுவதுபோன்ற மாயத் தோற்றம்.
அப்படி ஒரு படைப்பாளி மிகச் சிறந்த படைப்பை உருவாக்கியிருந்தால் அவர் யதார்த்த உலகையோ வாழும் காலத்தையோ பிரதிபலிக்காமல் மாய உலகை சிருஷ்டித்திருக்கிறார் என்றே ஆகிறது. எனவே அவருக்கு விருது தராததும் சரியே.
ஒரு படைப்பாளி சமகால ஆன்மாவைப் பிரதிபலிக்கவேண்டும். அப்படியான எழுத்தைக் கண்டுபிடித்து விருது தரவேண்டும். அது அற்புதமான படைப்பாகவும் செயலாகவும் இருக்கவேண்டுமென்றால் சமூகம் அப்படி அற்புதமானதாக இருந்தாகவேண்டும்.
சமூகம் அற்பமானதாக இருந்துகொண்டு அற்புதமான கலையை எதிர்பார்க்க முடியாது.
கண்ணாடி பளபளப்பாக இருந்தாலும் முகத்தின் கறை மாறாது. அசிங்கமான முகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி மிகவும் சரியான செயலையே செய்கிறது.
இதில் கல்லூரி – கல்விப்புல பேராசிரியர்கள் இதை விமர்சிப்பதெல்லாம் இழவு வீட்டுல கொன்னவனும் கூட உட்கார்ந்து அழுவதைப் போன்றது.
இலக்கியவாதிகளின் அறச்சீற்றங்கள் எல்லாம் வேறு பல விஷயங்களையெல்லாம் மறந்தாலே பொருட்படுத்தத் தகுந்தவையாக ஆகமுடியும்.
படைப்பாளிகளின் தனி மனித ஒழுக்கம் சார்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் எல்லாம் தனியாகப் பார்க்கப்படவேண்டியவையே. அவை ஒரு படைப்பை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அதிகம் பாதிக்க வேண்டிய ஒன்றே அல்ல.
கலை இலக்கியம் ஒழுக்கசீலர்களால் உருவாக்கப்படுவதல்ல. கலை இலக்கிய பிரபல்யத்தையும் அதிகாரத்தையும் ஒருவன் மலினமாக பயன்படுத்திக் கொண்டால் அது தனி மனித ஒழுங்கீனமாகத் தனியாகப் பார்க்கப்படவேண்டிய விஷயம் மட்டுமே.
கலை சார்ந்தும் பெரிதாக எதையும் செய்யாத ஒருவன் லாபியிங் மற்றும் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் நெளிச்சிரிப்புடன் கூழைக் கும்பிடுகளுடன் சஞ்சரித்த வண்ணம் இருந்திருந்தால் இந்த ஒழுங்கீனத்தையும் சார்ஜ் ஷீட்டில் எழுதிச் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி கலைக்கும் தனி மனித மதிப்பீடுகளுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கலாம்.
எதையும் பொதுமைப்படுத்துதல் கூடாது.
*
கலை, இலக்கியத்துறையில் மட்டுமல்ல; போலி திராவிட அதிகார மையத்தின் மலினம் அனைத்துத் துறைகளிலும் துலக்கமாகத் தெரியும்படியாகத்தான் இருக்கிறது.
தமிழகத்தின் அரசியல் இயக்கங்களையும் தலைவர்களையும்போல் ஆகக் கேடு கெட்ட கும்பல் உலகில் மிகவும் குறைவாகவே இருக்கும். மக்களும் நவீன கால விஷயங்களும் கொண்டுவந்த மாற்றங்கள், சாதனைகள் ஆகியவற்றுக்கு வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே திராவிட இயக்கமும் ஆட்சியும் கட்சியும் செய்துவந்திருக்கிறது.
23-ம் புலிகேசியின் அப்பட்டமான அழுத்தமான வாழும் வரலாற்று உதாரணம் திராவிட இயக்கமே.
அந்த சிக்ஸ் பேக் உடம்புடன் இந்த டெரர் மரு முகத்தை ஒட்டி வருங்கால சந்ததிக்கு காட்டும் சாதனை மட்டுமே நடக்கிறது.
திரையுலகை எடுத்துக்கொண்டால் வதவதவென பன்றியைவிட அதிக குட்டிகளைப் பெற்றுப் போட்டு அதில் சாதனை படைத்துவருகிறது. உலகின் சிறந்த படங்களுக்குத் தரப்படும் விருதுகளைப் புறந்தள்ளிவிடலாம். தமிழ் வாழ்வை தமிழ் சினிமாக்கள் பிரதிபலிப்பதே இல்லை என்ற ஒற்றை காரணமே தமிழ் திரைப்படங்களின் இடத்தைச் சுட்டிக்காட்டிவிடுகின்றன. கற்பனைகளுமே கூட தமிழ்த் தன்மை கொண்டதாகவோ தமிழ் மண் சார்ந்ததாகவோ இல்லை என்பது அதையும் விடப் பெரிய பலவீனம்.
கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் திராவிட அரசுப் பள்ளிகள் உலகின் அடிமட்ட இடத்தைப் பிடிப்பதில் வேக வேகமாக முன்னேறிவருகின்றன. தனியார் மற்றும் மத்திய அரசின் பள்ளிகளிலும் பல குறைகள் உண்டு. ஆனால் அவை இன்றைய லெளகிகக் கல்வியின் தேவையை பெருமளவுக்குப் பூர்த்திசெய்பவையாகத் திகழ்கின்றன. அந்த ஒரு பெருமைகூட திராவிடக் கல்வித்துறைக்கு இல்லை.
மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் அதே விஷயம்தான். உலகின் முன்னணி மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருக்கிறார்கள் என தமிழர்களும் தமிழகமும் பெருமை கொள்ள முடியும். இவையும் திராவிட அரசுகளை மீறி நடந்த சாதனைகளே இவை.
ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?
ஆக,
உள்கட்டமைப்பு (மத்திய, அந்நிய நாடுகளின் உதவியால் மட்டுமே), அடிப்படைவசதிகள், குடிமை உரிமைகள் – மதிப்பீடுகள் என பல விஷயங்களில் இந்திய அளவில் தமிழகம் மேம்பட்ட நிலையில் இருப்பதன் முக்கிய காரணம் திராவிட இயக்கத்துக்கு முந்தைய வரலாறு மட்டுமே.
நாம் இன்று லட்சாதிபதியாக இருக்கிறோம். மறுக்கவே முடியாது. முன்பு கோடீஸ்வரராக இருந்தோம். இதையும் மறக்கவே கூடாது.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்… தமிழக அரசு தரும் கலைமாமணி விருதுகளுக்கு தமிழகத்திலேயே என்ன மரியாதை இருக்கிறது?
இந்த விருதுகளைப் பெற்ற சில நல்ல கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த விருதை இந்தக் கைகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட தவறைத் தவிர அவர்களுடைய கலைத்துறையில் நிச்சயம் திறம்பட வெளிப்பட்டவர்கள் உண்டு. அவர்களுக்கு அந்தக் கலைத் திறமைக்கான மரியாதையை நிச்சயம் தரத்தான் வேண்டும். ஆனால், திராவிட மாடல் அரசின் விருதுக்கு தமிழர்களிடமே மரியாதை இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மையே.
முப்பது நாட்களில் சாஹித்ய அகாதமி விருது பெறுவது எப்படி? என்ற தொழில் நுணுக்கத்தை அதாவது இடது பக்கம் கெந்திக் கெந்தி நடக்கும் சப்பாணி நடையை ‘ராஜ நடை’யாகக் கருதி கற்றுத் தேர்ந்து கரை கண்ட கும்பலின் அடுத்த கட்டப் பாய்ச்சல் இப்போது நடந்தேறியிருக்கிறது. அல்லது அடுத்தகட்ட வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது.
ஒரு தனியார் அமைப்பு இதுவரை காப்பாற்றிய போலிப் பெருமையை இனியும் காப்பாற்றத் தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது. திராவிட இயக்க ஆசுகவி (இவன் ராஜ பரம்பரையின் அந்தப்புரத் தோழனும்கூட) தன் வழக்கமான மலினத்தையே செய்திருக்கிறான்.
சாஹித்ய அகாதமி இந்தச் செயல்களை எப்போதோ செய்ய ஆரம்பித்துவிட்டது. திராவிட அரசின் விருதுகள் என்றைக்குமே இந்த கண்ணியம் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை.
பன்றிகள் சாக்கடையில் வாழ்வதில்லை. தாம் வாழும் இடத்தை அவை சாக்கடை ஆக்கிக் கொள்கின்றன.
இதில் பெரிய வேதனை என்னவென்றால் இரண்டுக்கும் நம் வீட்டின் முன் வாசலில் இடம் ஏற்படுத்தித் தந்திருக்கும் நாம் தான் முக்கிய குற்றவாளிகள்.
‘சாக்கடையில் பன்றிகள் குதுகலமாக விளையாடிக் கொண்டிருக்குமே அந்த வீடு’ என்று நம் வீட்டுக்கு அற்புதமான அடையாளத்தை நாமே அரும்பாடுபட்டு உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
இதில், பன்றிகளையும் சாக்கடையையும் நொந்துகொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?



