உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட, சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் வீரரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் வீரர் தேஜ்பஹதூர், சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். ராணுவத்தில் வீரர்களுக்கு சரியான வகையில் உணவு கொடுக்கப்படவில்லை என்று கூறி, செல்பி எடுத்து, வீடியோ பதிவு செய்து வைரலாக்கி, ராணுவத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்தான் இந்த தேஜ்பகதூர்!
இந்நிலையில் அவரின் வேட்புமனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்கள் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால், அவர்கள் பணி புரிந்த இடத்தில் இருந்து தடையில்லாச் சான்று பெற்று வர வேண்டும்! இந்த விதிமுறையை தேஜ்பகதூர் பின்பற்றவில்லை எனப் படுகிறது. இதை அடுத்து, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேஜ்பகதூர், வேட்பு மனு தொடர்பில் தனக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றார்.