பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் நன்கு சம்பாதித்து விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் பாபா ராம்தேவ். மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ரூ. 3 லட்சம் கோடி முதல் ரூ. 5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், வங்கி அதிகாரிகளால் பிரதமர் மோடி தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார் என்றும், இதனால் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
வங்கிகளின் ஊழல் அதிகாரிகளின் பிடியில் மோடி சிக்கிக் கொண்டார். பண விநியோகம் பிரச்னை இல்லை. ஆனால், எல்லா பணமும் ஊழல் பணமாக மாறிவிட்டது. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருந்தபோதும், இது போன்ற தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது துரதிஷ்டம்தான். இது நம் அரசமைப்பு முறை மீது கேள்வி எழுப்பியுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் பல கோடிகளை சம்பாதித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் பாபா ராம்தேவ்.
தொடக்க காலத்தில் மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்து வந்த பாபா ராம்தேவ், தனது பதஞ்சலி பொருள்கள் விற்பனை நிறுவனம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அந்த நடவடிக்கைக்கு மட்டும் பலத்த எதிர்ப்பினை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.