கமல் முன் ஜாமின் மனு தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க தலைமைச் செயலர் கூட்டம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர், மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதிமய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்தார். இஸ்லாமிய சமூகத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ‘இந்து தீவிரவாதம்’ குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை அடுத்து அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதன் பின்னரும் தனது செயலை நியாயப் படுத்தும் விதத்தில், தாம் முன்பே அவ்வாறு கூறியிருப்பதாகவும், அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு, இப்போது தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே எழுப்பப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தாம் கூறியது சரித்திர உண்மை என்று விடாப்பிடியாக மீண்டும் அவர் தெரிவித்ததால், மதுரை, கரூர் உள்ளிட்ட இடங்களில், அவர் பிரசாரம் செய்த போது, அழுகிய முட்டை, செருப்பு ஆகியவை வீசப்பட்டன. மேலும், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப் பட்டன. நேற்று கரூரில் 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.
மதுரையில் அழுகிய முட்டை வீசிய பாஜக., பிரமுகரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அடித்து உதைத்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.
மேலும், கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதனால் கமல் கைதாகும் சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து தாம் கைதாகாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் கமல். நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனு குறித்து உடனடி முடிவு எடுக்காமல் ஒத்தி வைத்தது. இருப்பினும் சனிக்கிழமைக்குள் முடிவு எடுக்கப் படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சமாளிப்பது குறித்து தலைமைச் செயலர் தலைமையில் உயர் மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, கமல்ஹாசன் தாம் கைது செய்யப் பட்டால் தமிழகத்தில் பதற்றம் ஏற்படும்; அதைத் தவிர்க்க தாம் கைதாகாமல் இருப்பதே நல்லது என்று இன்று காலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.