என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நேற்று அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன்!
அப்போது அவர், வாலையும், தலையையும் கத்தரித்து போட்டால் யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். சரித்திரம் பதில் சொல்லும்.
இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை. இது உருவான சர்ச்சை அல்ல. உருவாக்கப்பட்ட சர்ச்சை.
கோட்சே குறித்து முன்பே பேசியுள்ளேன். தேர்தலில் வெற்றி நம்பிக்கை குறைந்ததால் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். மெரினாவில் பேசியபோது கண்டுகொள்ளாத நிலையில் அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர். சூலூரில் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது… என்றார்.
நீங்கள் கைதுக்கு பயப்படுகிறீர்களா, ஏன் முன் ஜாமின் கோரினீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், எனக்கு பிரச்சாரம் செய்யவேண்டும்! தவிர கைது செய்யவேண்டும் என்றால் செய்யட்டுமே, ஆனால் அதன் பிறகு தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அது வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை, அறிவுரையாகவே கூறுகிறேன்” என்றார்.
என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது… என்று கமல் கூறியது ஏதோ மிரட்டல் தொனியில் கூறுவதாகவே தெரிந்தது. .
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தபோது இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது.
இப்படியே பேசிக் கொண்டிருந்தால் ஒருநாள் கமலின் நாக்கை அறுக்கப் போகின்றனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கமல் பிரச்சாரம் செய்யாமல், வெளியில் தலைகாட்டாமல், விடுதியிலேயே தங்கியிருந்தார். பின்னர் மதுரையில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து நேற்று அவருக்கு பிரசாரம் செய்ய கரூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதை அடுத்து கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தார்.
கரூரில் அவர் பிரசாரம் மேற்கொண்ட போது அவர் மீது முட்டை, செருப்பு வீசப்பட்டது. இது தொடர்பாக, பாஜக. பிரமுகர் கைது செய்யப் பட்டார்.
இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்றுடன் பிரச்சாரம் நிறைவுறும் நிலையில் இன்று நடைபெறவிருந்த சூலூர் பிரச்சாரத்துக்கு காவல்துறை தடை விதித்தது. இதை அடுத்து, சூலூரில் பிரசாரம் செய்யாமல் சென்னை திரும்பினார் கமல்.


