
காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் ஜூன் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாள் உத்ஸவமான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊர்வலமாக வந்த எம்பெருமான் காந்திசாலை தேரடி பகுதியில் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் தேரோட்டம் துவங்கப்பட்டது. அமைச்சர்கள் சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ., பழனி, வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். காந்திசாலை, காமராஜர் வீதி, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக பெருமாளுக்கு நிவேதனப் பொருள்களுடன் காத்திருந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தலைமையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




