திக்விஜய் சிங், ப.சிதம்பரம் என மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள், தங்களது ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரித்துக் கொண்டு, இந்துத் தீவிரவாதம் இருக்கிறது என்று கற்பனையாக ஒன்றை உருவாக்கி, அதை நிரூபிக்க சாத்வி பிரக்யா தாகூர் உள்ளிட்டவர்களை சிறையில் அடைத்து, தங்களது குற்றச்சாட்டை மெய்ப்பிக்க அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காக அடித்துத் துவைத்து, சித்ரவதைகளைச் செய்து குற்றுயிரும் குலையுயிருமாக வைத்தனர்.
சாத்வி பிரக்யா தாக்குர் மீதான வழக்குகளில் எதையும் நிரூபிக்க இயலாமல் பயங்கரவாத தடுப்பு முகமை பின்வாங்கியது. அரசியல் ஜோடிப்பு இதில் கலந்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. சாத்வி ஜாமீனில் வெளியில் வந்தார்.
தொடர்ந்து அவருக்கு பாஜக.,வில் அமித் ஷாவினால் திடீரென சீட் ஒதுக்கப் பட்டது. அதுவும் திக்விஜய் சிங் போட்டியிடும் மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில்! இஸ்லாமிய வாக்கு வங்கியும் சாதி ஓட்டுக்களும் இருப்பதால் எளிதில் வென்றுவிடலாம் என்று கணக்கிட்ட திக் விஜய் சிங்குக்கு பெருத்த அடி. இம்முறை அனைத்துத் தரப்பு வாக்குகளையும் கவர்ந்து சாத்வி பிரக்யா வெற்றி பெற்றுவிட்டார்.
இதன் பின்னணியில், இஸ்லாமியர்களும் இருந்தார்கள். காரணம், திக்விஜய் சிங்கை விட பிரக்யா பெற்ற வாக்குகள் வித்தியாசம் 3,64,822. இது எப்படி சாத்தியம் என்று பலரும் தலையை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய ஆதரவு என்பது வேறு, இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு என்பது வேறு என்று காட்டியிருக்கிறார்கள் திக்விஜய் சிங்குக்கு! இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, சாத்வி இரு விவகாரங்களில் சிக்கினார். முதலாவது, தன்னை சிறையில் கொடுமைப் படுத்தினார் மகாராஷ்டிர காவல் அதிகாரி ஹேமந்த் கர்கரே என்றும், எந்தப் பொய்க்காக தன்னை சித்திரவதை செய்தாரோ அவர் மும்பையில் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டார் என்றும் கூறி ஒரு சர்ச்சையைக் கிளப்பினார்.
அடுத்து, மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேவை தேச பக்தர் என்றார். இது இரண்டில் இருந்தும் பாஜக., விலகி நின்றது. பிரதமர் மோடி ஒரு படி மேலே போய்… சாத்வி பிரக்யாவை தாம் மன்னிக்கவே முடியாது என்றார்.
அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை, சிறையில் தாம் அனுபவித்த கொடுமைகளுக் கெல்லாம் வடிகாலாக தற்போது அவருக்கு எம்.பி. பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ள போபால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சாத்விக்கு உரிய மரியாதையை மோதி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தம்மை சந்தித்து வணக்கம் சொன்ன போது, பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார் என்று விமர்சனம் முன்வைக்கப் பட்டது. மோதி ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீவிர இந்துத்துவவாதிகள் கேட்கத்தான் செய்தார்கள்.
ஆனால்… சாத்விக்கு உரிய மரியாதையை பாஜக.,வின் வலி தெரிந்த மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அளித்தார். சாத்வியை அவர் பாராட்டி, அவருக்கு மதிப்பளித்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது!