வயநாடு: கேரளத்தில் தலித் போராளியான இளம் பெண் மிருதுளாதேவி சசீதரன் என்பவரிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக, கேரள நடிகர் விநாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் கல்பேட்ட போலீசார்.
திமிரு, சிலம்பாட்டம் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்தவர், கேரள நடிகர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்த இவர், மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாகவும் பேசியதாக முகநூலில் அந்தப் பெண் பதிவு செய்துள்ளார். அதில் அவர், நடிகைகள் அவர் மீது மதிப்பு கொண்டிருந் தாலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெண்களுக்கு எதிரானவர்.
எனக்கு அவர் மீது எந்த மதிப்பும் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தவர், என்னுடன் தங்கப் போவதாகவும், என் தாயும் அவருக்கு தேவை என்றும் கூறினார் என பதிவு செய்தார். அவரது பேச்சு செல்போனில் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை மறுத்த விநாயகன், தாம் ஒரு போதும் சாதிய ரீதியாக பேசுவதோ சாதி வேறுபாடுகளைக் காட்டுவதோ கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இதை அடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கல்பேட்ட போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 506, 294பி, கேபிஏ 120, 120ஓ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.