
அன்னூரில் இன்று காலை புதரில் வீசப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது. அந்த சிசுவை வீசிவிட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர்- கோவை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே அதிக பொதுமக்கள் கூடும் இடமாகும்.
இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் வழக்கமான வேலைகளுக்காக அந்த பகுதியில் சென்று வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு முட்பதரிலிருந்து குழந்தையின் அழும் குரல் கேட்டுள்ளது.
இதனையடுத்து பதறிய பொதுமக்கள் புதரை நீக்கி பார்த்தபோது அங்கு வெள்ளை துணி ஒன்றில் சுற்றப்பட்டு பிறந்த 2 நாட்களே ஆன அழகான பெண் குழந்தை கிடந்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஆம்புலன்ஸ், மற்றும் அன்னுார் பேலீசுக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் பெண் சிசுவை மீட்டு ஆம்புலன்சில் அன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச்சென்ற தாயை தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அதன் தாய் வீசினாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

