வண்டியை ஓட்டிச் செல்லும் போது செல்போனில் பேசாதீர்கள் என்று அரசு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்கிறது. வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் அபராதம் என்று போலீஸாரும் கண்காணிப்பதால், சிலர் வெளியே தெரியும் வகையில் பேசிச் செல்வதில்லை. ஆனால், ஹெல்மெட் கட்டாயம் என்று ஆக்கப்பட்ட நிலையில், ஹெல்மெட்டுக்குள் மறைத்து வைத்து, செல்போனை பேசிச் செல்கின்றனர்.
இத்தகையவர்களுக்கு அதிர்ச்சியும் எச்சரிக்கையும் தரும் வகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
சாதாரணமாகவே செல்போனில் உள்ள பேட்டரி சூடாகி, அதன் மூலம் செல்போன் சூடாகி திடீரென பேட்டரி வெடித்து விடும் சம்பவங்கள் சில நடந்துள்ளன. இந்நிலையில், செல்போனை காதுக்கும் ஹெல்மெட்டுக்கும் இருக்கும் இடைப்பகுதியில் செருகி பேசிச் செல்பவர்கள், செல்போனில் ஏற்படும் உராய்வு, அதிர்வு ஆகியவற்றால் அது பாதிக்கப் படும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி அருகே ஹெல்மெட்டுக்குள் வைத்தபடி செல்போனில் ஒருவர் பேசிச் சென்றபோது அது வெடித்துச் சிதறியது. இதில், காயமடைந்த நபர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி புளியரசி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டடத் தொழிலாளரான இவர், பைக்கில் வரும்போது போன்கால் வந்துள்ளது. உடனே அவர், பைக் ஓட்டியபடியே ஹெல்மெட்டுக்குள் செல்போனை செருகிக் கொண்டு, மறுமுனையில் இருப்பவருடன் பேசியபடியே சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில், சூளகிரி அருகே வந்த போது இவரது அலைபேசி பெருத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் தலை மற்றும் காது பகுதிகளில் காயத்துடன் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.