ஜெகனின் சிக்கன நடவடிக்கை…! புது ஆளுநரின் இருப்பிடம் இதுதானா….?
ஆந்திராவின் புது ஆளுநராக 84 வயது பிஸ்வ பூஷன் ஹரி சந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் வசிப்பதற்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ராஜ்பவன், அதாவது ஆளுநர் மாளிகை இதுவரை இல்லை. அதனால் விஜயவாடாவில் உள்ள முதலமைச்சரின் கேம்ப் ஆபிஸிலேயே அவருக்கு இருப்பிடம்/தங்குமிடம் ஏற்பாடு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆந்திரப் பிரதேச ஆளுநராக பிஸ்வ பூஷன் ஹரிசந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. இதுவரையில் இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் இணை ஆளுநராக ஈஎஸ்எல் நரசிம்மன் இருந்து வந்தார். இனி அவர் தெலங்கானாவுக்கு மட்டுமே ஆளுநராக இருக்கப் போகிறார். அவர் ஆளுநராக இரு மாநிலங்களுக்கும் சேர்த்து கவனித்த போது, ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனின் இருந்தே இயங்கினார்.
ஆந்திர மாநிலம் புதிதாக அமைக்கப் பட்டு, அமராவதி தலைநகர் ஆன பின்னர், தற்போது அமராவதியில் இன்னும் ராஜ்பவன் கட்டடம் முழுமை அடையவில்லை. அதனால் ஆந்திராவில் புது ஆளுநர் பிஸ்வ பூஷன் எங்கு வசிப்பார் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை ஆர்வத்துடன் ஒருவருக்கொருவர் கேட்டும் வருகின்றனர் .
ஆந்திர மாநிலம் பிரிக்கப் பட்ட போது, ஹைதராபாத்தையே ஆந்திர அரசும் பத்தாண்டு காலத்துக்கு தங்கள் மாநிலத்தின் தலைநகராகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப் பட்டது. ஆனால் முந்தைய சந்திரபாபு அரசு நடுவிலேயே அமராவதிக்கு தலைநகரை மாற்றிக் கொண்டுவிட்டது.
அப்போதே, அவசர அவசரமாக, தலைமைச் செயலகம், சட்டமன்றக் கட்டடம் முதலிய அரசுத் துறைக் கட்டடங்களைக் கட்டி முடித்துவிட்டார்கள். ஆனால் பத்தாண்டு காலம் ஆந்திரா, தெலங்காணாவுக்கு ஒருவரே ஆளுநராக இருப்பார் என்ற எண்ணத்தில், ஆளுநர் மாளிகையைக் கட்டி முடிப்பதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது, ஆந்திராவில் புது அரசு அமைந்துள்ள நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும் நட்புறவுடன் இருப்பதால், மத்திய அரசு ஆந்திரத்துக்கு புதிய ஆளுநரை நியமித்தது.
விஜயவாடாவில் ஆளுநர் மாளிகைக்கு என்று கட்டடம் அமைக்கப் படாத காரணத்தால், இதுவரை விஜயவாடாவுக்கு வந்தபோதெல்லாம் இருமாநில ஆளுநராக இருந்த ஏ.எஸ்.எல்., நரசிம்மன் நட்சத்திர விடுதியில்தான் தங்கியிருந்தார்.
ஆனால், தாம் அரசுக்கு வந்தது முதல், சிக்கனம் சிக்கனம் என்று பேசி வரும் ஜகன் மோகன் ரெட்டி, புது ஆளுனருக்காக விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தையே ஆளுநருக்கான தங்குமிடமாக மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெகன், தாடேபல்லியில் உள்ள தனது சொந்த வீட்டையே முதல்வரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். அதனால் பழைய முதல்வர் முகாம் அலுவலகத்தை ஆளுநருக்கு ஒதுக்கியுள்ளார். பந்தர் ரோட்டில் உள்ள இந்த மாளிகை முதலில் நீர்ப்பாசனத்துறை அலுவலகமாக இருந்தது. பின்னர் நவீனப்படுத்தி முதல்வர் முகாம் அலுவலகமாக மாற்றினார்கள். அண்மைக்காலம் வரை தற்காலிக உயர் நீதிமன்றமாகக் கூட பயன்படுத்தினார்கள்! இப்போது இதே மாளிகையை ஆளுநருக்கு ஒதுக்கியுள்ளார்கள்.
ஆந்திர மாநில ஆளுநராக தன்னை நியமித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்த பின் பிஸ்வபூஷன் ஊடகத்தினருடன் உரையாடினார். ஒடிசாவைச் சேர்ந்தவரானாலும் தாம் ஆந்திரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்றார். ஆந்திரா ஒடிசா இடையே சாதகமான தொடர்புகளுக்கு முயற்சிப்பேன். ஆந்திர மாநிலத்துக்கான பிரச்னைகளை தீர்ப்பதற்கு தன்னாலான முயற்சிகளை எடுப்பேன் என்று அவர் கூறினார்.