ஜூலை 18 ம் தேதி, வியாழக்கிழமை இன்று நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி புதிய மாவட்டம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதை அடுத்து, தென்காசி பகுதி மக்கள் ஆர்வத்துடன், தங்களது மாவட்டத்தில் எந்த ஊர்கள், தாலுகாக்கள் சேரும் என்று அலசத் தொடங்கி விட்டனர். இதுவரை திருநெல்வேலிக்காரன்டா என்று கெத்து காட்டி வந்த நெல்லை மாவட்ட மேற்குப் பகுதி மக்கள், இனி தென்காசிக்கு மாற வேண்டியிருக்கும்!
இதனிடையே, தங்கள் பகுதிகள் எந்த மாவட்டத்தின் கீழ் வருகின்றன என்று பலரும் ஆவலுடன் செய்திகளை எதிர்நோக்கியிருந்தார்கள். அம்பை தாலுகா எந்த மாவட்டத்தில் வருகிறது என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. அது குறித்தும் கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் டிவி. செய்திகளில் அம்பை தாலுகா தென்காசி மாவட்டத்தில் வரும் என்று கூறப்பட்டது. அப்படி என்றால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், அணைகளின் பகுதிகள் அனைத்துமே தென்காசிக்கு வந்துவிடும் சூழல் இருந்தது. இந்நிலையில், தற்போது புதிய வரையறையாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
புதிய வரையறை – தென்காசி மாவட்டம் : ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி
புதிய வரையறை – திருநெல்வேலி மாவட்டம் : சீதபற்பநல்லூர், திசையன்விளை, தேவர்குளம், கயத்தார், நாங்குநேரி, வள்ளியூர், களக்காடு, அம்பை – என தகவல் வெளியானது.