நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகை செய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு திங்கள் கிழமை நேற்று நிறைவேற்றியது.
இந்த மசோதாவின்படி, ஆந்திர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ள பணிகளில் 75 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்ய அந்த நிறுவனத்தால் இயலாமல் போனால், உள்ளூர் இளைஞர்களுக்கு உரிய திறன் சார் பயிற்சியை மாநில அரசின் திறன் மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப் பட்டு பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
உள்ளூர் நபர்களுக்கு திறன் இல்லை என்ற காரணத்தைக் கூறி அதிகப்படியான வெளிநபர்களை தங்கள் நிறுவனங்களில் பணிக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது! இந்தப் புதிய மசோதாவின்படி, நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும். இது குறித்து தங்கள் நிறுவனங்களில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜெகன் மோகன் முன்னர் தேர்தல் பிரசாரத்தை ஒட்டிய பாதயாத்திரையை மேற்கொண்டிருந்தார். அப்போது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து சட்டம் இயற்றுவேன் என்று உறுதியளித்தார். அதன் அடிப்படையில் இந்த மசோதாவை இயற்றியுள்ளாராம்.