ஏர்செல் மேக்சிஸ் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் தற்போதைய எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை வரும் ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இருந்த போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடிக்கு முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என்றும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் இதற்கு உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை மத்திய அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இது குறித்த வழக்கு தில்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், தங்களைக் கைது செய்வதில் இருந்து தடை கோரி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதனை விசாரித்து வரும் சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். தொடர்ந்து, இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் போதெல்லாம், அவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் இருந்து தடை விதித்து, தொடர்ந்து தடையை நீட்டித்து வருகிறார்.
இன்றும் தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதில் இருந்து தடை விதித்து, தடையை வரும் ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து, உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் போக்கு பலருக்கும் சிதம்பர ரகசியத்தைப் புரிய வைத்து வருகிறது.