பாண்டிச்சேரியில் கவிழ்ந்ததற்கு ஜெகத்ரட்சகன்தான் ‘மாஸ்டர் மைண்ட்’ என்பதைப் புரிந்து கொள்ளாத…
அரசியல் தற்குறிகளான காங்கிரசார் ஃபிப்ரவரி 25 அன்று திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தப் போகின்றனர்!
ஜெகத்ரட்சகன் அவர்கள் ஏதோ திமுகவின் மூன்றாம் நிலை – நான்காம் நிலை மேடைப் பேச்சாளர் அல்ல!
ஒரு வெற்றிகொண்டானோ, தீப்பொறி ஆறுமுகமோ, வண்ணை ஸ்டெல்லாவோ அல்ல அவர்!
ஜெகத்ரட்சகன் அவர்கள் திமுகவினரால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர்!
திமுகவின் பொருளாதார – நிதி ஆதாரத் ‘தூண்களில்’ ஒருவர். அக்கட்சியின் தவிர்க்க இயலாத முக்கியப் புள்ளி அவர்.
அவர் பாண்டிச்சேரி மேடையில் பேசுகிறார்:
“வரும் தேர்தலில் 30 தொகுதிகளிலும் திமுக வெல்லும் – இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்”- என்கிறார்.
அது மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாகவும், நாராயணசாமி அரசு கவர்னர் கிரண்பேடியுடன் மோதுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டதாகவும் வேறு குற்றம் சாட்டினார்.
சுதாரித்து இருக்க வேண்டாமா காங்கிரஸ்?
ஜெகத்ரட்சகனை திமுக வெளியே அனுப்பியதா? கட்சி மேலிடம் அவரைக் கண்டித்து அறிக்கை விட்டதா?
ஈயம் பூசினாற் போலவும் இருக்கணும் – பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது மாதிரி மிகச் செல்லமாக அவரைக் கடிந்து கொண்டதாக, ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்ததாக, யாரோ சொன்னதாக….
அது போகட்டும்.
இப்போது ராஜினாமா செய்த தட்டான்சாவடி MLA வெங்கடேசன் விஷயத்தை திமுக எப்படி அணுகியது?
“ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுதான் ராஜிநாமா செய்தேன்”- என்று அவர் கூறியதாக செய்திகள் வந்தன.
அது உண்மையானால் ஸ்டாலின் என்ன செய்திருக்க வேண்டும்?
அப்படியெல்லாம் செய்யாதே – அது கூட்டணி தர்மத்துக்கு விரோதம் என்றல்லவா தடுத்திருக்க வேண்டும்.
20 – ம் தேதி வெங்கடேசன் ராஜிநாமா செய்கிறார் – நடவடிக்கை இல்லை!
21 – ம் தேதி கவர்னர் அறிவிக்கிறார் – மறுநாள் 22/02/2021 மாலை 5 மணிக்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று!
அப்போதும் – “உங்கள் ராஜிநாமாவை வாபஸ் வாங்குங்கள்”- என்று திமுக மேலிடம் வெங்கடேசனுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை!
குறைந்தபட்சம் அவரது செயலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதமாவது அனுப்பியதா? அதுவும் இல்லை!
பிறகு 22 (திங்கள்) காலை சட்டமன்றம் கூடுகிறது!
“போய் சபாநாயகரை சந்தியுங்கள் – உங்கள் ராஜிநாமா கடிதத்தை வாபஸ் வாங்குங்கள் – கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கேளுங்கள் – சபாநாயகர் உங்கள் ராஜிநாமா வாபஸை ஏற்கிறாரா இல்லையோ – உங்களைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கிறாரோ இல்லையோ – உங்கள் மனமாற்றத்தை எழுத்து பூர்வமாகப் பதிவு செய்து கட்சிக் கட்டுப்பாட்டை நிரூபியுங்கள் “- என்று வெங்கடேசனை திமுக மேலிடம் வற்புறுத்தியதா? அதுவும் இல்லை!
எல்லாம் முடிந்து போனபின்…
சபாநாயகர் சிவக்கொழுந்து – “நியமன உறுப்பினர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி வாக்களிக்கும் உரிமை உண்டு – நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது”- என்று கூறிய பின்…
நாராயணசாமி தனது சகாக்களுடன் கவர்னர் தமிழிசை அவர்களை சந்தித்து ராஜிநாமாவை சமர்ப்பித்த பின்…
சாவகாசமாக திமுக வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்கிறது – அதுவும் எப்படி? – ‘தற்காலிக நீக்கம்’! – அவ்வளவுதான்!
இன்னும் பத்துப் பதினைந்து நாள் கழித்து – “எனது செயல் கட்சித் தலைமையைப் புண்படுத்தி இருக்குமானால் எனது ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”- என்று வெங்கடேசன் ஒரு கடிதம் கொடுத்தால்…
நாங்கள் அடிப்பது மாதிரி அடிக்கிறோம் – நீ அழுவது மாதிரி அழு என்ற நாடகம் முடிந்த பிறகு…
அவர்தான் மீண்டும் தட்டான் சாவடி தொகுதி திமுக வேட்பாளராக ஆனாலும் ஆவார்!
ராஜீவைக் கொன்ற 7 கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறும் திமுகவின் பின்னே – “மன்னித்து விட்டோம்”- என்று கூவிக் கொண்டே செல்லும் நீங்கள்…
நாராயணசாமி மந்திரிசபையைத் தீர்த்துக் கட்டிய வெங்கடேசனை மன்னித்து விட்டோம் என்று கூவிக் கொண்டே தட்டான்சாவடியில் வோட்டுக் கேட்டு வலம் வந்தாலும் வருவீர்கள்!
கருணாநிதி ஆயிரம் விதங்களில் கொள்கை ரீதியான எதிரியாக இருக்கலாம் – ஆனால் எதிராளியின் நகர்வுகளை மோப்பம் பிடிப்பதில் அவரிடம் பிச்சை வாங்க வேண்டும் நீங்கள்!
1998 ல் அதிமுக ஆதரவுடன் வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி உருவாகிறது!
ஒரே வருடத்தில் ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விலகுவதற்கான சமிக்ஞைகள் புலப்படுகின்றன.
உடனே ஓடிப் போய் – “வாஜ்பாயின் ஹிந்தி கவிதைகளை நான் ரசிப்பேன் – நான் கூறும் புறநானூற்று உவமைகளை அவர் ரசிப்பார்!”- என்று கிடைத்த சிறிது இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு ஓடிப் போய் பாஜகவுடன் கூட்டணி போட்டார் கருணாநிதி!
காங்கிரஸ்காரர்கள் ராஜதந்திரத் தற்குறிகளாக – ILLITERATES IN STATESMANSHIP – கண் எதிரே இவ்வளவு நடந்தும்…
நகர்வுகளை மோப்பம் பிடக்க முடியாமல் – UNABLE TO SMELL THE MOVES – திமுகவுடன் பேச்சு வார்த்தை என்று போகிறீர்கள்!
அவர்களும் “பாண்டிச்சேரியில் நடந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து”- உங்களோடு கைகோர்த்து ஆர்ப்பாட்டம் என்று சீன் காட்டுவார்கள்!
பாண்டிச்சேரியில் உங்களைக் கவிழ்த்தது – ‘சங்கி’ – இல்லையடா! உன் கூடவே நிற்கும் ‘மங்கி’!
இதை உணராமல் ‘அரசியல் தற்குறிகள்’ என்று காங்கிரஸ் தன்னை நிரூபித்துக் கொள்ளப் போகும் நாள் – ஃபிப்ரவரி 25!
- கருத்து: முரளி சீதாராமன்