மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசினார்.
பவன் பிளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்தபோது மனமுடைந்து போய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது என் அண்ணனிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருந்தது. அதை எடுத்து என்னை நானே சுட்டு தற்கொலை செய்ய நினைத்தேன். அந்த அளவுக்கு மன வருத்தத்தில் இருந்தேன். என்னை பார்த்த அண்ணன், தேர்வில் தோல்வி என்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை, இந்த முறை இல்லையென்றால் அடுத்த முறை எழுதி வெற்று பெறலாம் என்று ஆறுதல் கூறினார்.
தேர்வில் தோல்வி அடைந்ததற்காக எல்லாம் மனம் சோர்வு அடையக்கூடாது. அண்ணன் எனக்கு ஊக்கம் அளித்தார். அதனால் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டேன். என் அண்ணன் போன்று அனைத்து வீடுகளிலும் பெரியவர் இருந்திருந்தால் தெலுங்கானாவில் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்கள் என்றார்.
இந்த ஆண்டு தெலுங்கானாவில் பிளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்ததால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து ஒரு வேளை விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லையோ என்று விசாரித்தபோது மாணவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
பவன் கல்யாண் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது பற்றி பேசியது இது முதல் முறை அல்ல. முன்னதாக அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் ரொம்ப வெட்கப்படுவேன். ஒரு முறை விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கின்போது ஆயிரக் கணக்கான மக்களுக்கு முன்பு நான் பேருந்தின் மீது நின்று நடனம் ஆட வேண்டும் என்றார்கள். உடனே நான் என் அண்ணி சுரேகாவுக்கு போன் செய்து, நடிப்பு எல்லாம் எனக்கு வராது, நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்றேன் என்றார்.