வெள்ளரி தூத்பேடா
தேவையானவை:
நடுத்தரமான வெள்ளரிக்காய் – 400 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 100 கிராம்
மைதாமாவு – 100 கிராம்
கெட்டிப்பால் – 400 மில்லி
வெள்ளரிவிதை – 1 மேசைக்கரண்டி
வென்னிலா எசன்ஸ் – சில துளிகள்
பச்சைக் கலர் – சில துளிகள்
செய்முறை :
வெள்ளரிக் காய்களைக் கழுவித் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெள்ளரி விதைகளை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
மைதாமாவை லேசாக வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை வாணலியில் கொதிக்க விட்டு வெள்ளரி விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பால்வற்றி விழுது சுருண்டு வரும் பொழுது பாதி நெய்யைவிட்டு கிளற வேண்டும். சர்க்கரையைச் சேர்த்து நிதானமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.
சர்க்கரை நன்கு சேர்ந்து தளதள என்று கொதிக்கும்போது மைதாவைப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிளறி பாக்கி நெய்யை விட வேண்டும். கலர், எஸன்ஸ் சேர்க்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிய உருண்டைகளாகச் செய்து பேடா மாதிரி தட்டி வெள்ளரி விதைகளைத் தூவ வேண்டும்.