மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (28), அகிலா (27) ஆகியோருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஐயப்பனின் குடிப்பழக்கத்தின் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் அகிலா மயக்கமடைந்து கிடப்பதாக ஐயப்பனின் குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற அகிலாவின் குடும்பத்தார் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அகிலாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அகிலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் ஐயப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அகிலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குத்தாலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.