இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வருகின்றனா்.
இதன் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைத்துத்துறைகளிலும் தமிழகம் சிறந்தோங்கி விளங்குகிறது. தொழில் தொடங்குவதில் மாநிலத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதற்கு முதல்வரின் அயராத உழைப்பே காரணம்.
பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
வெளிநாட்டில் இருப்பதைபோல நம் நாட்டிலும் விடுமுறை நாட்களில் அரசு பள்ளி மாணவா்களை அருகில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் சென்று தொழில்பயிற்சி அளிக்க முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார்.
இதுபற்றி முதல்வர் ஆலோசித்து முடிவு செய்தவுடன் இது நடைமுறைபடுத்தப்படும். இதன் மூலம் மாணவா்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் இருந்து விளையாட சென்று வெற்றிபெறும் விளையாட்டு வீரா்களுக்கு தமிழக அரசு ஊக்கமும், ஆக்கமும் தருவதற்கு தயாராக இருக்கிறது என்றும் கூறினார்.