ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடங்கியதில் இருந்து லாக்டவுன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் என வழக்கமான இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது.
பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துவிதமான கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் (online classes) மூலமாக பாடம் நடத்துவது இயல்பாக, கொரோனா வைரஸ் பரவல் முக்கிய காரணமானது. தற்போது முதல் வகுப்பு படிக்கும் குழந்தையும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கின்றனர்.
இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகக்கூட மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டும் சம்பவங்கள் வெளியாகி, பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணக்கர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இனிமேல் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் அந்தந்த பள்ளி நிர்வாகங்களால் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு தொடர்பான காட்சிகளை, பள்ளி நிர்வாகம் (school administration) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (parent-teacher association) என இருவரும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறையை கொண்டுவர ஒரு குழுவை அமைப்பதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், நிபுணர்கள், உளவியலாளர்கள் (psychologists), கல்வியாளர்கள், சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (crimes against women and children)குறித்து நிபுணத்துவம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் எண் ஒன்று உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்ட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் (POCSO Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக, இது போன்ற புகார்களில், மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.