சிபிஐ.,க்கு புதிய இயக்குனரைத் தேர்வு செய்ய இன்று மீண்டும் குழு கூடுகிறது.
சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக தில்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுளைக் கூறியதால் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிபிஐ.,க்கு நிரந்தர இயக்குனரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதை அடுத்து, சிபிஐ.,க்கு புதிதாக இயக்குனரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு, சிபிஐ.,க்கு புதிய இயக்குனரைத் தேர்வு செய்ய தொடர்ந்து கூட்டம் நடத்தி வருகிறது. ஆயினும் முடிவு எதுவும் எடுக்கப் படவில்லை.
தொடர்ந்து, சிபிஐ இயக்குனருக்கான பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இன்று பிரதமர் தலைமையில் மீண்டும் நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்தில் யார் என இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.