செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவரின் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை!
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், என்பவர் சாலை விதி மீறல் குறித்து தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்க என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட எண் எப்போதும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது என்றே பதில் வருவதாக மனுதாரர் கூறினார்.
இதை அடுத்து, போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார் அளிப்பதற்கு என்றே வைக்கப் பட்டுள்ள போன் எண் ஏன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர், செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதத்தை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிய வழக்கிலும் மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.