தமிழகம் முழுவதும் கடந்த இரு நாட்களாக வாக்காளர் பெயர் சேர்ப்பு- திருத்த முகாம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கடைசி வாய்ப்பாக அமைந்த சிறப்பு முகாம்களில் 7 லட்சத்து 31 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் வாக்காளர் பட்டியல் வெளியிட்டாக வேண்டும். அதற்கு முன்னர், வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தவும், நீக்கவும் என சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாம்களில் புதிதாக பெயர் சேர்ப்பது, திருத்தம் மேற்கொள்வது, பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கம் செய்வது ஆகியவற்றுக்காக 7 லட்சத்து 31 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாம்.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இரண்டு நாள் வாக்காளர் சிறப்பு முகாமில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 188 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். சனிக்கிழமை அன்று ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 754 பேரும், ஞாயிறன்று 4 லட்சத்து ஐந்தாயிரத்து 434 பேரும் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதனிடையே வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை கணக்கிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். மேலும், 21 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதற்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.