மகனை தொகுதிக்கு தத்துக் கொடுத்திருப்பதாகக் கூறும் திமுக பொருளாளர் துரைமுருகனிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொகுதி மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
நேற்று வேலூர் மண்டி வீதியில் அமமுக., வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார் டிடிவி தினகரன்!
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்; திமுக வேட்பாளரான தனது பிள்ளையை இந்த தொகுதிக்கு தத்துக்கொடுப்பதாக முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் சொல்கிறார். மக்களாகிய நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் தனது மகனை இங்கே தத்துக் கொடுப்பதாகக் கூறி எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு விடுவார்.
7 ஆண்டுகளாகத்தான் திமுக ஆட்சியில் இல்லை. திமுக ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடை பியூட்டி பார்லர் ஆகியவற்றை அடித்து நொறுக்குகின்றனர்.
திமுக மோடி பக்கம் போகலாமா அல்லது காங்கிரசின் பக்கம் போகலாமா என்று பார்த்துவிட்டு… இறுதியாக காங்கிரஸ் பக்கம் சென்றது. ராகுல் காந்திக்கு பிரதமராக முதிர்ச்சியில்லை என்று கூறிய ஸ்டாலின் தற்போது ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று மாற்றி மாற்றி பேசுகிறார்.
இங்கு அவர்கள் வென்றாலும் மத்தியில் பாஜக வென்றால் திமுகவினர் மீண்டும் மோடி பக்கம் சென்றுவிடுவார்கள். அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள். அதனால் தான் 10 ஆண்டுகள் அட்டை போல் காங்கிரசை உறிஞ்சிக் கொண்டிருந்தனர். அப்போது நடந்த இலங்கை படுகொலையை கூட அவர்கள் வாய் திறந்து ஏன் என கேட்கவில்லை…. என்று பேசினார் தினகரன்.