என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்; அதை சந்திக்கத் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்!
ஏற்கெனவே திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், பல மேடைகளில் தான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசிட மாட்டேன். எதையும் ஆதாரத்தோடுதான் பேசுவேன். காரணம் நான் கலைஞரின் மகன் என்று பேசி வந்தார். பேசி வருகிறார்.
அவரது பேச்சுக்கு, வாரிசு அரசியல் என்று பலத்த விமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப் பட்டு வருகின்றன. திமுக.,வில் தலைமைப் பொறுப்புக்கு வேறு யாருமே இல்லையா?! வாரிசு அரசியல் கோலோச்சுகிறது திமுக.வில்! வலியத் திணிக்கப் பட்ட தலைமை என்று விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வரும் நிலையில், அடுத்த தலைமைக்கு அடிபோடும் விதமாக… ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளார்.
தற்போது, அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தன் தந்தை ஸ்டாலின் பாணியில், அவரும் இப்போது “நான் கலைஞரின் பேரன்” என்று சொல்லிக் கொண்டு பிரசாரம் செய்வது வாரிசு அரசியலை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் திமுக., வேட்பாளரை ஆதரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வெளியிட்டதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை என்று கூறினார்.
மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய போது, கூட்டத்தில் சிலர் ‘இல்லை’ என்று குரல் கொடுத்தனர். ”பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க முடியுமா?” என்று அவர் கேட்ட போது, ‘மறக்க முடியாது’ என்று சிலர் பதிலளித்தனர்.
”துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் அதிமுகவைச் சேர்ந்தவர். இதைச் சொன்னதற்கு அவர்கள் என் மீது வழக்கு போடலாம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள்; அதைச் சந்திக்க நான் தயார். ஏனெனில் நான் கலைஞரின் பேரன்… என்று பேசியபோது, ஸ்டாலின் வழியை உதயநிதியும் பின்பற்றுகிறார் என்றனர் கூட்டத்தில் இருந்தவர்கள்!