அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது; தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் என்று மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார் மதுரை ஆதினம்.
ஏற்கெனவே மதுரை ஆதினம் இது குறித்துப் பேசியிருந்தார். அதிமுக.,வுடன் அமமுக., இணையும். அதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகின்றது. தேர்தலுக்குப் பின் அது சாத்தியமாகும் என்று கூறியிருந்தார். ஆனால், அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
அதிமுக.,வுடன் இணைவதற்கான சாத்தியமே இல்லை என்றும், அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் திரை மறைவிலும் நடைபெறவில்லை என்றும் கூறினார் டிடிவி தினகரன். இது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம், மோடி எதிர்ப்பாளர், பாஜக., எதிர்ப்பாளர், மாநில அரசை நடத்தி வரும் அதிமுக., எதிர்ப்பாளர் என்ற அளவில் கட்சியை நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். இதே போன்ற நிலைப்பாடுள்ள திமுக., உள்ளிட்ட கட்சிகளுடனோ, கூட்டணியிலோ அவர் சேரவுமில்லை.
அதே நேரம், ஆதினமோ, எப்போதுமே திமுக,வுக்காக தரகு வேலை பார்ப்பார். கருணாநிதி இருந்தவரை கருணாநிதிக்காக ஆதரவுக் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். ஆனால், இம்முறை திடீரென தடம் மாறி, அதிமுக., வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக.,வின் இந்து விரோத நிலைப்பாடுகள், பிற மதத்தினருக்கு வலிய வந்து எல்லாம் செய்வது, இந்து மக்களின் நம்பிக்கைகளை இழிவு படுத்துவது என அரசியல் நடத்தி வரும் திமுக.,வை ஆதினம் இந்த முறை கைகொடுக்கவில்லை என்கிறார்கள்!
ஆனால், திமுக.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வேலை செய்த அனுபவம் பெற்றவர் மதுரை ஆதீனம். இருப்பினும், அதிமுக., பாஜக., கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. .இந்நிலையில் ஆதீனம் மீண்டும் இவ்வாறு டிடிவி தினகரன் அதிமுகவில் ஐக்கியமாகிவிடுவார் என்று கருத்து தெரிவித்திருப்பது பலருக்கும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.