எனது தேசப்பற்று குறித்து யாரும் சந்தேகப்பட முடியாது. கேள்வி எழுப்ப முடியாது. இதற்கான அனைத்து பதிலையும் எனது வாழ்க்கை சொல்லும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி கூறியவை…
மிஷன் சக்தி குறித்த விவகாரத்தில், எதிர்க் கட்சிகளுக்கு அடிப்படை அறிவு தேவை. அவர்களது அறிக்கையில் தவறுகள் உள்ளன. ஏசாட் சோதனை செய்வதற்கு முன்னர் அது குறித்து அதிகளவு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்!
மக்கள் எனக்கு அளித்த பணியை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். இதனால், எனக்காக நான் வாழ முடியாது. எத்தனை காலம் நான் பணியாற்ற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனரோ அதுவரை நான் பணியாற்றுவேன்.
வறுமையை ஒழிப்பதே என் லட்சியம். நாட்டின் நலனே உயர்ந்தது. நாட்டிற்கு எதிராக எந்தச் செயல் நடந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில் வேறுபாடு காட்டப்படாது.
2.5 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொழிலதிபர்களா?
சுதந்திரம் பெற்றது முதல் வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் இணைப்புகள் குறித்தும், கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட எரிவாயு இணைப்புகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
வாரிசு அரசியல், ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தலைமுறை, நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்று முழங்கினர். இந்திரா பேசினார். ராஜிவ் பேசினார். சோனியா பேசினார். தற்போது ராகுல் பேசி வருகிறார்.
குஜராத்தில் முதல்வராக இருந்த மோடியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு, பிரதமராக மோடி செய்த பணி குறித்தும் தெரியும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தது யார்? குற்றச்சாட்டுகளை சொல்வதற்கு முன்னர் அவர்கள் முதலில் கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
முந்தைய அரசுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என்பவை, எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடிய ஏடிஎம் இயந்திரங்களைப் போல் இருந்தது. காங்கிரஸ் அரசு இந்த ஏடிஎம்களை பயன்படுத்தி கொண்டது. தற்போது பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தங்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடப்பதை எதிர்க்கட்சிகள் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
சொகுசு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சிக்கிய கிறிஸ்டியன் மைக்கேல், இந்தியாவுக்குக் கொண்டு வரப் பட்டுள்ளார்.அவர் சிறையில் இருந்து கொண்டு உண்மைகளைச் சொல்லி வருகிறார்.
சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது. மோசடி செய்த நபர்கள் தான், மத்தியில் அரசு எப்போதுதான் மாறுமோ என்று காத்துக் கொண்டுள்ளனர்.
டீக் கடைக்காரர் குறித்த கவலை நான் முதல்வராக இருந்த போது எழுப்பப்படவில்லை. நான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதும் எனது பின்னணி குறித்து விமர்சனம் செய்தனர்.
பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக இந்தியா போரிடவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமே போரிடுகிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தான் வழக்கமாகக் கூறும். ஆனால், நடவடிக்கை எடுக்காது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படுவதை நேரடியாகப் பார்க்கும் வரை நான் அந்நாட்டின் சதியில் விழ விரும்ப வில்லை.
எதிர்க் கட்சிகள், பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கையை வைத்து சொந்த நாட்டு பிரதமரை சந்தேகிக்கின்றனர். இத்தகைய நபர்களை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். மோடியின் தேசப் பற்று குறித்து எந்த நபரும் கேள்வி எழுப்ப முடியாது. சந்தேகப்பட முடியாது. இதற்கான அனைத்து பதில்களையும் எனது வாழ்க்கையே சொல்லும்.
2014ல் கிடைத்த வெற்றியை விட வரும் தேர்தலில் பாஜக., அதிக இடங்களைப் பிடித்து முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
கடந்த காலங்களில் எங்களது பிரதிநிதித்துவம் குறைந்த இடங்களில் மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு போட்டியே இல்லை.
மத்தியில் அடுத்து அமையும்; அது முழு மெஜாரிட்டியுடன் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
30 ஆண்டு காலம் நிலையற்ற ஆட்சி மற்றும் 5 ஆண்டுகள் நடந்த நிலையான ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர். இதனால் மக்கள் நிலையற்ற தன்மைக்கு நாட்டை கொண்டு செல்ல மாட்டார்கள்.
பொறுப்பான குடிமகன், பொறுப்பான அரசியல் கட்சி, பொறுப்பான பிரதமர் என்ற வகையில், அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன்.