பின்னாளில் காவல்துறை விசாரணை அதிகாரிகள்,இந்த டிரங்காலை செய்தது நாதுராம் கோட்ஸேதான்,கோபால் கோட்ஸே, பம்பாய் வந்தது பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் எனும் வாதத்தை முன் வைத்தனர்.
இந்த முயற்சியெல்லாம், காந்தி கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும், டெல்லிக்கு பயணிப்பதற்கு முன் சாவர்க்கரிடமிருந்து உத்தரவுகளையோ, அல்லது அவரது ஆசிகளையோ பெற்றார்கள் என்று நிரூபிக்கத்தான்.
ஆனால்,காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற கோபால் கோட்ஸே பின்னாளில் கூறிய தகவலின்படி, அவருக்கு சாவர்க்கரின் வீடு எங்கிருக்கிறது என்றே தெரியாது என்றார்.
மாறாக,டெல்லியிலிருந்த ஹிந்து மஹா சபாவின் செயலாளர் சாவர்க்கருடன் பேச விரும்பியிருக்கலாம்,அல்லது அவருக்கு ஏதாவது தகவல் சொல்ல எண்ணியிருக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
ஹிந்து மஹா சபாவின் அப்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யாராக இருந்த போதிலும்,காங்கிரஸ்காரர்களுக்கு காந்தி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாவர்க்கர் ஹிந்து மஹா சபா தொண்டர்களுக்கு.
இது குறித்து ஒரு அறிவிப்பை அப்போது லஹிரி வெளியிட முற்பட்ட போது,பொது மக்களிடமிருந்தும்,அரசிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் சாவர்க்கரை எப்படியாவது காந்தி கொலையில் சம்பந்தப்படுத்தியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தில் அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் அதிதீவிரமாக முயன்றும்,உழைத்தும் கொண்டிருந்த சூழ்நிலையில்,
சாவர்க்கர் இல்லத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றது தாங்கள்தான் என்று தைரியமாக கூற யாரும் முன் வரவில்லை.
ஆக சாவர்க்கரின் இல்லத்திற்கு தொடர்புகொள்ள முயன்றவர்கள் யாரென்பது கடைசி வரை ரகசியமாகவே இருந்து போனது.
ஆனால் நாதுராம்தான் அந்த ’ காலை ‘( CALL ) செய்தார் என்று போலீஸாரால் நிரூபிக்க இயலவில்லை.
அப்படியேயிருந்தாலும்,அதை நிரூபிப்பதால் எந்த பயனும் வந்திருக்காது.ஏனென்றால் அந்த டிரங்கால் பேசப்படவேயில்லை. காலை 11.30 அளவில் அதை யார் புக் செய்தாரோ, அவரே அதை கேன்ஸலும் செய்து விட்டிருந்தார்.
அந்த ‘ காலை ‘ப்பற்றி இவ்வளவு பிரஸ்தாபமானதின் நோக்கம், காந்தி கொலையில் சாவர்க்கரை எப்படியாவது சம்பந்தப்படுத்தி விட வேண்டும் என்பதுதான்.
ஆனால்,கார்கரேயின் கூற்றின்படி,’ கால் ‘ செய்யப்பட்டதாக கூறப்பட்ட அந்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகத்தான் எல்லோரும் கோபால் கோட்ஸே,திகம்பர் பாட்கே மற்றும் ஷங்கர் கிஷ்டய்யா ஆகியோருக்காக ஆவலாகக் காத்திருந்தபோது,
ஒரு ‘ டோங்கா ‘ சத்தம் கேட்க வெளியே வந்து பார்த்த போது,கோபால் கோட்ஸே மட்டும் அதிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அவரை அவசர அவசரமாக அறைக்கு அழைத்துச் சென்றவர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வி அவர் ரிவால்வரை கொண்டு வந்திருக்கிறாரா என்பதுதான்.
கோபால் கோட்ஸே ரிவால்வரை கொண்டு வந்திருந்தார். அதன் பிறகு கோபால் கோட்ஸேயை அறையிலேயே குளிக்கவும்,ரெஸ்ட் எடுக்கவும் விட்டு விட்டு,மீண்டும் ஒரு முறை ஆய்வினை மேற்கொள்ள,கார்கரே,நாதுராம்,ஆப்தே ஆகியோர் பிர்லா ஹவுஸிற்கு சென்றனர்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்