ரத்தத்தின் ரத்தங்களே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாய் திறந்து குழறல் குரலில் விளிக்கும் போது… கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் தூள் பறக்கும்.
எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும், ஏழைகளின் நலனுக்காக வாரி வழங்கிய வள்ளல் என்று பெயர் எடுத்தவர். பலருக்கு தனிப்பட்ட வகையில் உதவிகள் செய்தவர். வறுமையில் வாடிய பலரது வாழ்வில் விளக்கேற்றிய வள்ளற் பெருந்தகை!
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது, திமுக.,வினால் ஒன்றும் செய்ய முடியவில்லை! 1967ல் அண்ணாதுரை திமுக.,வை வெற்றி பெறச் செய்து ஆட்சி அமைத்தார். ஆனால் அவர் உயிரிழந்த பின்னர் 1969 ல் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் முதல்வர் யார் என்ற போட்டியில், மு.கருணாநிதியை ஈ.வே.ராமசாமி நாயக்கர் கட்டப்பஞ்சாயத்து செய்து, முதல்வராக முன்னிறுத்தினார்.
ஆனால் 1971ல் திமுக., ஆட்சி கலைக்கப் பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் திமுக., வென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதற்கு எம்.ஜி.ஆரின் பிரசார பலமே காரணம் என்பது உலகறிந்த ரகசியம்.
ஆனால் எம்.ஜி.ஆரின் பலத்தினால் காலத்தை ஓட்டிய கருணாநிதி, பின்னாளில் கட்சியில் கணக்கு கேட்டார் என்ற காரணத்துக்காக 1972ல் எம்.ஜி.ஆரை., கட்சியை விட்டு வெளியேற்றினார்! அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆரே வென்றார். கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராகவே அமர முடிந்தது. 1989 வரை அதுதான் நிலை! அதிமுக., இரண்டாகப் பிளவு கண்டதால் சின்னம் முடக்கத்தின் காரணமாக வென்ற திமுக., இப்போது இந்திய அரசு ரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு கசியவிட்டதற்காக கலைக்கப் பட்டது.
அதுவரையிலும் நாடக மேடைகளிலும் சினிமாக்களிலும் பொய்களை மட்டுமே திணித்துப் பேசி வந்த திமுக., அதன் பின்னும் பிரசார பலத்துக்காக சன் டிவியை பயன்படுத்தியது. அதன் மூலம் மக்கள் மனத்தில் ஜெயலலிதாவைப் பற்றிய மோசமான பிம்பத்தைப் பதியவைத்து, ஜெயலலிதா மீதான வெறுப்பைக் காட்டியே மீண்டும் 1996ல் வென்றது. அதன் பின்னர் 2001ல் மீண்டும் ஜெயலலிதாவே மக்கள் மனத்தை வென்றார். இப்போது ஜெயலலிதா உடன் இருப்பவர்கள் குறித்த மோசமான பிம்பத்தை மக்கள் மனத்தில் பதிய வைத்தது. அதன் பின்னர் மீண்டும் 2006ல் வென்றது.
இப்படி குறுகிய காலம் ஆட்சி செய்தாலும், திமுக., தமிழகத்தில் விளைவித்த இன்னல்கள் வெகு அதிகம். லட்சாதிபதி, கோடீஸ்வரர் என்ற கணக்கை எல்லாம் தள்ளிவிட்டு, மில்லினியர் பில்லினியர் குடும்பத்தை உருவாக்கிய மாபெரும் சாதனையை கருணாநிதி படைத்தார்.
ஆனால், எம்.ஜி.ஆரோ, ஏழைப் பங்காளன் என்ற பெயரோடு, பெரிதாக தனக்கென்று சொத்து சுகம் வைத்துக் கொள்ளாமல், கட்சிக்கே பல நன்மைகளைச் செய்துவிட்டுப் போனார்.
தமிழகத்தில் நாம் ஓர் ஏழைப் பங்காளனைப் பார்த்தோம் என்றால், இந்திய அளவில் இன்று மோடியைப் பார்க்கிறோம். பிரதமர் மோடி, தனக்கென குடும்பத்தை அழைத்துக் கொண்டு பிரதமர் மாளிகையை நிரப்பினார் இல்லை.
காமராஜர் தன் தாயை விருதுப்பட்டியில் தனியே விட்டுவிட்டு, சென்னையில் தான் மட்டும் அரசு வீட்டில் தங்கினார் என்றால், அதைப் போன்றே நேர்மையான வழியில் அரசின் பிரதம சேவகன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, பிரதமர் இல்லத்தான் தான் தங்கிக் கொண்டு கிராமத்தில் இருக்கும் தாயை அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார் பிரதமர் மோடி.
எம்.ஜி.ஆர்., எப்படி ஏழைகளுக்கு அரசின் நிதியையும், தனிப்பட்ட வகையில் தன் சேமிப்பில் இருந்து ஏழைகளின் நலனுக்கு அள்ளிக் கொடுத்தாரோ, அது போல் பிரதமர் மோடி இந்திய அளவில் தன் சொந்தப் பணத்தை எடுத்து சமூகத் திட்டங்களுக்கும் , பெண்கள் கல்விக்கும் ஏழைப் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கும் அள்ளிக் கொடுக்கிறார்.
பிரதமர் மோடி அண்மையில் சியோல் அமைதி விருது பெற்றார். அந்த விருதுத் தொகை ரூ.1.30 கோடியை கங்கை தூய்மைப் பணியான நமாமி கங்கே-வுக்கு அப்படியே அளித்தார்.
மேலும், தனக்கு வந்த பரிசுப் பொருள்களை ஏலம் விட்டு கிடைத்த ரூ.3.40 கோடியை நமாமி கங்கே – கங்கை தூய்மைப் பணிக்கு கொடுத்தார்.
அதற்கு முன்னதாக 2015 ல் தனக்குக் கொடுக்கப் பட்ட பரிசுப் பொருள்களை ஏலம் விட்டுக் கிடைதத ரூ.8.33 கோடியை கங்கை தூய்மைப் பணிக்கு அளித்தார்.
குஜராத் மாநில முதல்வராக இருந்த போது தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாயை, குஜராத் அரசு ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்விக்காக நன்கொடை அளித்தார்.
குஜராத் மாநில முதல்வராக இருந்த போது தான் பெற்ற பரிசுப் பொருள்களை ஏலம் விட்டுக் கிடைத்த தொகை ரூ.89.96 கோடியை கன்ய கேலவானி நிதி என்ற பெண் குழந்தைகள் கல்விக்காக அளித்தார். அந்த வரிசையில் தற்போது ரூ.21 லட்சத்தை கும்பமேளா துப்புரவுப் பணியாளர்கள் நல நிதிக்கு அளித்துள்ளார்.
ஆனால்… கொள்ளை அடிப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக.,வினர் தங்கள் சொந்தப் பணத்தில் ஒரு துரும்பைக் கூட ஏழைகளுக்கு அளித்ததில்லை. கட்சிக்காக ஓட்டு போடும் சிலருக்கு திமுக., அறக்கட்டளை வழியே லஞ்சமாகக் கொடுக்கிறார்கள். நாய்க்குப் போடும் பிஸ்கட்டைப் போல!
அதேபோல், எம்ஜிஆருக்குப் பின்னர் அதிமுக., வில் ஒட்டிக் கொண்டு குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தப் போராடிய சசிகலா குடும்ப வகையறாக்களும் ஊரை அடித்து உலையில் ஏற்றி சொந்த சொத்தைக் குவித்து வந்தார்களே அன்றி, எம்ஜிஆரின் கட்சியை அவர் போல் வளர்த்தார்களில்லை.
ஆனால் இன்று அதே ஏடிஎம்கே., ஏழைகளுக்கு ரூ.2000 மாத சிறப்பு நிதி உதவித் தொகையாக தர முடிவு செய்தது. பொங்கல் சலுகையாக ஆயிரம் ரூபாயை அளித்தது. இன்னும் பல நலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம், மோடி என்ற மனிதனின் உந்து சக்தியே!
ஆனால் திமுக.,வோ, தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் ஏடிஎம்கே அரசு கொடுக்கும் ஏழைகளுக்கான நிதி உதவிகளையும் கூடாது என்று பொறாமையால் தடுத்து நிறுத்த நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு, மூக்குடை பட்டு தோற்றுப் போய் நிற்கிறது.
ஆக… ஆக… அன்று ஏடிஎம்கே.,வாக இருந்தது இன்று மோடிஎம்கே ஆக மாறி, தமிழக மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு எத்தனை எத்தனை திட்டங்களை அள்ளி வழங்குகிறது!?
ஆனால் திமுக., வோ அந்தத் திட்டங்கள் மக்களுக்குக், கிடைக்காதவாறு தடுத்து, நீதிமன்றம் மூலமாக வழக்குகள் போட்டும், தனது பத்திரிகைகள் மூலமாக பொய்களை பரப்பியும் மக்களை ஏமாற்றி ஏய்த்துப் பிழைத்து வருகிறது! எனவே… திமுக.,வின் தோலுரிக்க., முகமூடியைக் களைந்து பிடுங்கி எறிய…
காலத்தின் தேவை தமிழகத்தின் அவசியத் தேவை… மோடிஎம்கே!
நன்றி: பட உதவி, கட்டுரைக்களன் உதவி, தலைப்பு உதவி, சிந்தனை உதவி: ஆனந்தவிகடன்
பின்குறிப்பு: இந்தக் கட்டுரைக்காக எவரும் ரூ.200 நமக்கு அளிக்கவில்லை என்றும், அட்வர்டோரியல் என்ற வகையில் 4 பக்க வண்ணக் கட்டுரை எழுதி பக்கத்துக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொள்ள எவரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் என் மனசாட்சியை முன் வைத்து உறுதி அளிக்கிறேன்.
(ஆ-ர்)