இலங்கையில் கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் பட்ட நிலையில், கிறிஸ்துவ சர்ச்சுகள், ஹோட்டல்களைக் குறிவைத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 320க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
இந்தத் தகவல் வெளியான அதே நாளில், இந்தியா இந்த குண்டுவெடிப்பு குறித்து முன்னரே இலங்கைக்கு உளவுத் தகவல் கொடுத்ததாகவும், விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்த உளவுத் தகவல் எப்படி, எங்கிருந்து யாரால் பெறப்பட்டு, அளிக்கப் பட்டன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில், பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் உளவு அமைப்பு உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, இது தொடர்பாக நாடு முழுதும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புள்ள முந்தைய செய்திகள்…
ஐஎஸ்., தொடர்பு… தமிழகத்தில் பிடிபட்ட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை பதிவு!
பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பு திட்டம் முறியடிப்பு! என்.ஐ.ஏ., அதிரடி வேட்டையில் 10 பேர் கைது!
பயங்கரவாதிகளின் புகலிடமான ராமநாதபுரம் கடற்கரை! தேவை என்.ஐ.ஏ., அதிரடி!
கோவையில் கடந்த ஆண்டு இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ்., அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஆறு பேரை, என்ஐஏ., போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட தீவிர விசாணையில், அவர்கள் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து கைப்பற்றிய வீடியோக்களை என்ஐஏ., அதிகாரிகள் நுணுக்கமாக ஆய்வு செய்தனர். அப்போது இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் ஜஹ்ரான் ஹஷிம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மீதும் வேறு பல இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெட்வொர்க் குறித்து கண்டுபிடிக்கப் பட்டு, நடவடிக்கைகள் மேற்கொண்டது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்.
இதே நெட்வொர்க், இலங்கை, தமிழகம், கேரளாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, இஸ்லாமிக் ஸ்டேட் அமைக்க பிரசாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதன் மூளையாக செயல்பட்டவன் ஜஹ்ரான் ஹஷீம். இது தொடர்பில் பல்வேறு வீடியோக்களை யுடியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறது இந்தக் குழு.
மேலும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இந்தக் குழுவின் விவகாரத்தில் விசாரணைகள் இறுகிய போது, இலங்கையில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த ஹஷிம் திட்டம் தீட்டியிருந்ததை, என்ஐஏ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உடனே, இது குறித்து இந்திய துாதரகம் மூலம், இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்தனர். இது தொடர்பான ஆதாரங்கள், பெறப்பட்ட தகவல்களை, இலங்கை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக தேவாலயங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று இலங்கையிடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தங்கள் நாட்டில் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், அசட்டையாக இருந்துள்ளது இலங்கை அரசு. காரணம், பாகிஸ்தானின் ஆதரவு, முஸ்லிம்கள் குடியேற்றத்தை அனுமதித்தது, அவர்கள் மீது வைத்த நம்பிக்கை இவற்றால் பெரும் அசம்பாவிதத்தை இலங்கை சந்தித்துள்ளது.
இப்போது, பாகிஸ்தானியர் மேற்பார்வையில் செயல்படும் தாமிர ஆலை ஒன்றில்தான் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பட்டதாகவும், அங்கிருந்தே குண்டுகள் பல இடங்களுக்கும் கொண்டு செல்லப் பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் 9 பாகிஸ்தானியரை கைது செய்துள்ளது. அவர்களே இந்த பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டுகளை தயாரித்தளித்திருக்க வேண்டும் என்று அரசு சந்தேகப் படுகிறது.