இந்தக் கோவிலின் தலவிருஷம் ஐந்தாகும். சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, விநாயகர் ஆகிய ஐந்து இறைசக்தியும் இக்கோயிலில் உள்ள அரசு, வேம்பு, மாவிலிங்கம், மாதுளை, கருவேப்பிலை ஆகிய ஐந்து மரங்களில் எழுந்தருளியிருக்கிறார்கள். அந்த மரங்களின் கீழ் மூலவரான பாலசுப்ரமணியசுவாமி மயில் வாகனத்திற்கு அருகில் குழந்தை வடிவில் வீற்றிருக்கிறார்.
குழந்தைப்பேறு வேண்டுவோர் இங்கு வழிபட்டால் விரைவில் மழலைப் பேறு கிட்டும். வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறிய பிறகு, பாயசத்தை நிவேதனமாகப் படைத்து, அதனை கோயிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி, சிறுவர்களை அருந்தச் சொல்கிறார்கள். இதனை படிப்பாயச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயச நிவேதனத்தை ஏற்பதாக ஐதீகம்.