தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப் படவில்லை என்று கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. இதன் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
இதில், தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்தது! மேலும், தேர்தல் ஆணையம் கூறிய படி, 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு புதன்கிழமை இன்று விசாரிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக, காங், மதிமுக, இடதுசாரி கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இன்று விசாரிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு காரணமாக ஏற்கெனவே அறிவித்த தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, மீண்டும் புதிய அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது! அனைத்துத் தரப்பினரும் தலைமை நீதிபதி முன் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
தமிழக அரசு தெரிவித்த போது…
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை திமுக விரும்பவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழலில் இதுபோன்ற மனுக்களை திமுக தாக்கல் செய்துள்ளது
திமுக தரப்பு:
ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டை பயன்படுத்து கின்றனர். இந்த அடிப்படையில் தேர்தலை நடத்தக் கூடாது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி தேர்தலை நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. தங்கள் தரப்பில் ப.சிதம்பரம் வாதங்களை வைக்க மேலும் 5 நிமிடங்கள் அவகாசம் வேண்டும்.
தமிழக அரசு:
ஒரு நிமிடம் கூட அவகாசம் அளிக்காதீர்கள். தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் எவ்வளவு நேரம் பேசுவார்கள்.
திமுக:
மற்ற வழக்குகளில் நீங்களும் இப்படி தான் செய்தீர்கள்.
தமிழக அரசு:
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அரைகுறையாக படித்துவிட்டு பேசுகிறார்கள். திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தும் பொய்.
தலைமை நீதிபதி பாப்டே:
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தினால் திமுக.,விற்கு சம்மதமா?
திமுக:
ஆரம்பத்தில் இருந்தே இதே கருத்தை தான் வலியுறுத்தி வருகிறோம்.
இதை அடுத்து அனைத்துத் தரப்பு வாதங்களின் அடிப்படையில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு கூறுகையில்,
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து, தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு: உள்ளாட்சி தேர்தலுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். இந்த மக்கள்தொகை அடிப்படையிலேயே ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.
மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களாக குறைத்து உத்தரவிடுகிறோம்.