கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்தது.
பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணியை அனுமதிக்க படுக்கை வசதி இல்லை என்று கூறி எட்டு மருத்துவமனைகள் திருப்பி அனுப்பிய நிலையில், கடைசியாக ஒரு மருத்துவமனைக்குள் செல்லும் போதே, ஆட்டோவுக்குள்ளேயே குழந்தை பிறந்து மரணம் அடைந்துவிட்டது.
இது குறித்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற அவலம் நடப்பதாகவும் அந்த விடியோவை பகிர்ந்த நபர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கேசி பொது மருத்துவமனை வளாகத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை உயிர்பிழைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்று அனுமதி கோரிய கர்ப்பிணியின் குடும்பத்தினர், அடுத்த 6 மணி நேரமாக மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தவித்த நிலையில், எதிர்பாராத விதமாக குழந்தை ஆட்டோவிலேயே பிறந்த நிலையில் உயிரிழந்துவிட்டது.
தற்போது கர்நாடகத்தில் கொரோனா பேரிடரால் பல மருத்துவமனைகள் போதுமான மருத்துவ வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 3,648 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் பெங்களூருவில் மட்டும் 1,452 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.