மனதின் குரல் (14ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள் : 26.07.2020
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று ஜூலை மாதம் 26ஆம் நாள், இன்றைய தினம் மிகவும் விசேஷம் நிறைந்தது. இன்று ‘கார்கில் விஜய் திவஸ்’, அதாவது கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றதைக் குறிக்கும் நாள் ஆகும்.
21 ஆண்டுகள் முன்பாக, இதே நாளன்று தான் கார்கில் யுத்தத்தில் நமது இராணுவமானது இந்தியாவின் வெற்றிக் கொடியை நாட்டியது. நண்பர்களே, கார்கில் போர் நடைபெற்ற போது நிலவிய சூழ்நிலையை பாரதம் என்றுமே மறவாது. பெரியபெரிய கனவுகளை மனதில் கொண்டு பாரதநாட்டு பூமியை அபகரிக்கவும், தங்கள் நாட்டில் நிலவி வந்த உள்நாட்டுப் பூசல்களிலிருந்து அவர்களது மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பாகிஸ்தான் இந்த வெற்று சாகஸத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
பாரதமோ அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது; ஆனால்,
பயரூ அகாரண் சப் காஹூ சோ. ஜோ கர் ஹித் அன்ஹித் தாஹூ சோ.
“बयरू अकारण सब काहू सों | जो कर हित अनहित ताहू सों ||
அதாவது அனைவருடனும் வன்மம் பாராட்டுவது தான் தீயோரின் இயல்பாகும் என்பதே இதன் பொருள்.
இத்தகைய இயல்பு கொண்டோர், நல்லது செய்வோருக்கும் தீமையை செய்வது பற்றியே சிந்திக்கிறார்கள். ஆகையால் இந்தியாவின் நட்புக் கரத்துக்கு பதிலாக பாகிஸ்தானம் முதுகில் குத்தும் கயமைத்தனத்தை முயன்றது; ஆனால் பாரதநாட்டின் வீரம் நிறைந்த இராணுவத்தினர் தங்களின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார்கள், உலகம் முழுவதும் இதைக் கண்டது. மலையுச்சிகளில் வீற்றிருக்கும் எதிரிகளோடு அடிவாரத்தில் இருந்தபடி போரிடும் நம் நாட்டு வீரர்கள்.
ஆனால் வெற்றி என்னவோ மலை உச்சியில் இருப்பவர்களுக்குக் கிடைக்கவில்லை, அடிவாரத்தில் நெஞ்சுரத்தோடும், மெய்யான வீரத்தோடும் பொருதிய நமது இராணுவத்தினருக்குத் தான் கிடைத்தது, இந்தக் காட்சியை சற்று கற்பனைக்குக் கொண்டு வந்து இருத்திப் பாருங்கள்! நண்பர்களே, அந்த வேளையில் கார்கில் செல்லவும், அங்கே நமது இராணுவத்தினரின் வீரத்தைக் கண்ணாறக் காணவும் எனக்குப் பேறு கிடைத்தது. அந்த நாளை, அன்று வாய்த்த சில கணங்களை, எனது வாழ்வின் மிக விலைமதிப்பே இல்லாத தருணமாக நான் கருதுகிறேன். கார்கிலில் நாம் பெற்ற வெற்றியை மக்கள் நினைவுகூருவதை நான் இன்று காண்கிறேன்.
சமூக ஊடகத்தில் #courageinkargil என்ற ஒரு ஹேஷ்டேகிலே மக்கள் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள், உயிர்த்தியாகம் செய்தோருக்கு தங்கள் நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்து வருகிறார்கள். நான் இன்று நாட்டுமக்கள் அனைவரின் தரப்பிலிருந்தும், நமது இந்த வீரர்களுடன் கூடவே, பாரத அன்னைக்கு இப்படிப்பட்ட சத்புத்திரர்களை ஈன்றளித்த தாய்மார்களுக்கும் என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.
இன்று நாள் முழுவதும் கார்கில் வெற்றியோடு இணைந்த நமது வீரர்கள் பற்றிய கதைகளை, வீரம் நிறைந்த தாய்மார்களின் தியாகத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
www.gallantryawards.gov.in என்று ஒரு இணையதளம் இருக்கிறது, இதில் நீங்கள் ஒருமுறை நுழைந்து பாருங்கள் என்ற வேண்டுகோளையும் நான் உங்களிடம் விடுக்கிறேன். அங்கே தீரம் நிறை நமது இராணுவ வீரர்களைப் பற்றியும், அவர்களின் பராக்கிரமம் பற்றியும் ஏகப்பட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும், அந்தத் தகவல்களைப் பற்றி நீங்கள் உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடும் போது உத்வேகத்துக்கான ஊற்றுக்கண் உங்களுக்குள்ளே திறக்கும். கண்டிப்பாக இந்த இணையத்தளத்திற்கு நீங்கள் சென்று பாருங்கள், மீண்டும் மீண்டும் சென்று பாருங்கள் என்று தான் நான் கூறுவேன்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….