இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பி வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மன்னார்குடி ஜீயர்சுவாமி கூறியதாவது, “அயோத்தி இராமர் கோயிலுக்காக தமிழகம் சார்பில் 5 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளியால் ஆன செங்கற்களை காணிக்கையாக அனுப்பி வைத்துள்ளோம்.
தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் இந்த காணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு வந்து சேரும் நிதி தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களது தேவையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.