உலக புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ள திருப்பதி நகரம் ஸ்ரீ பாலாஜி மாவட்டமாக பெயர் மாற்றப்படுகிறது
திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா, பண்டிகை, விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் ஆந்திரா முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்களை அவர் உருவாக்கியுள்ளார்.
ஆந்திராவில் ஏற்கெனவே 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மக்களவை தொகுதியையும் புதிய மாவட்டமாக உருவாக்க முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்திருந்தார்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரிய பரப்பளவை கொண்ட தொகுதிகளை இரு மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்தார்.
அதன்படி புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தை மையமாக கொண்டு மன்யம் என்ற மாவட்டமும், விசாகப்பட்டினத்தில் உள்ள படேருவை மையமாக கொண்டு அல்லூரி சீதாராம்ராஜ் என்ற மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அது போல் திருப்பதியை மையமாக கொண்டு ஸ்ரீபாலாஜி மாவட்டமும் விஜயவாடாவை மையமாக கொண்டு என்டிஆர் மாவட்டமும், ராயச்சோட்டியை மையமாக கொண்டு அன்னமய்யா மாவட்டமும் புட்டபர்த்தியை ஸ்ரீசத்யசாய் மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அமலாபுரத்தை மையமாக கொண்டு கோணசீமா மாவட்டமும், நரசராவ்பேட்டையை மையமாக கொண்டு பல்நாடு மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சந்திரகிரி தொகுதி, திருப்பதியை ஒட்டியுள்ளது. இது பாலாஜி மாவட்டத்திலும் திருப்பதி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட சர்வபள்ளி தொகுதி நெல்லூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.
மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெனமலூர், கன்னவரம் சட்டசபை தொகுதிகள் விஜயவாடா நகரின் ஒரு பகுதியாகும்.
இவை விஜயவாடாவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள என்டிஆர் மாவட்டத்திலும் மச்சிலிப்பட்டினத்தை மையமாக கொண்ட கிருஷ்ணா மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு உள்ளன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான அரசாணை உடனடியாக வெளியானது.